340 தீங்கு செய்வோர்க்கும் நன்மையே செய்க - பிழை பொறுத்தல் 5

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

தீதொருவர் செய்தனரென் றதற்கெதிராய் நீயவர்க்கோர்
.தீங்கு செய்யின்
சாதுநீயும் யவர்தீய ரென்பதற்குக் கரியென்ன
..சக்கி லாதார்
ஓதவிட முண்ணி’ன்’விழி யுடையாரு முண்ணுவரோ
..வுலப்பில் செந்நெல்
சேதமுற அவைத்திடுவோர்க் குணவாதல் போனலமே
..செய்வாய் நெஞ்சே. 5

- பிழை பொறுத்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”நெஞ்சே! உனக்கு ஒருவர் தீங்கு செய்தார் என்று பதிலுக்கு நீ அவர்க்கு ஒரு தீங்கு செய்தால் நல்லவன் நீ என்றும், அவர் தீயவர் என்றும் வேறு படுத்துக் கூறுவதற்குச் சான்று என்ன இருக்கின்றது?

கண்ணில்லாதவர் சாவினைத் தரும் நஞ்சினை உண்டார்களானால், கண் உடையவர்களும் உண்பார்களோ?

கெடாத செந்நெல்லை உமி நீங்கி சேதமடையும்படி குற்றுவோர்க்கு அந்நெல் உணவாகி நன்மை செய்வது போல, தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சாது - நல்லவன். கரி - சான்று. சக்கு - கண்.
ஓதம் - சாவு. அவைத்திடுவோர் - குற்றுவோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-23, 9:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே