512 கன்னத்தில் கண்டவுரு நின்உருவே கள்வனன்று – கணிகையரியல்பு 39
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
வண்ணமல ரமளியின்மே லிருக்கையிலோர் பரபுருடன்
..வரவு நோக்கிப்
பண்ணமரு மொழிமின்னாள் விளையாடல் போற்றன்கைப்
..பதுமத் தாலென்
கண்ணதனை மூடிவிட்டே னெனநகைத்தாள் வேற்றாளார்
..கள்ளீ யென்றேன்
கண்ணடிபோற் றிகழுமென்றன் கபோலமதி லுன்னுருவைக்
..கண்டா யென்றாள். 39
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நிறமும் மணமும் அழகும் நிரம்பிய பூப்பரப்பிய கட்டிலின்மேல் இருவரும் ஒன்றாய் இருந்தோம். அப்பொழுது அயலான் ஒருவன் வரக்கண்டதும், அப்பொதுமகள்-பண்ணமைந்த இனிய சொல்லையுடையாள் விளையாட்டுப்போல் என் கண்ணை அவள் தாமரைபோன்ற கையினால் பொத்தித் தான் என் கண்ணை மூடிவிட்டதாகச் சொல்லி நகைசெய்தாள்.
யான் சினங்கொண்டு `கள்ளீ! வந்த வேற்றாள் யார்? என வினவினேன். அவள் நாணமும் துன்பமும் கொண்டவள்போல் நடித்துக் கண்ணாடிபோல் விளங்கும் தன்னுடைய கன்னத்தில் என்னுடைய உருவம் தோன்றிற்று என்றும், அதனை யான் கண்டேன் என்றும் கூறி மயக்கினாள்.
வண்ணம் - நிறம். அமளி - கட்டில். பரபுருடன் - அயலான். பதுமம் - தாமரை. கபோலம் - கன்னம்.