மழை விளையாடல்...

அது மழைக்காலம் அல்லாத
பிரிதொரு நாள் ...
தூரலாய் துவங்கி
தூவிக்கொண்டே
இருந்தது வானம் .
ஓடுகளின் மேடுகள்
முதலில் நனைந்தன...
பள்ளங்கள் வழியே
சறுக்கி விழுந்தது
மழை நீர் .
நிலவிலிருந்து
வெட்டிஎடுத்த – தங்கம்
போலொரு முகம்....
அது அவள் ...
தூரல் எல்லாம்
துளிகளாய் மாறி
அவள் முகத்தில்
முத்தமிட ...
ஓடினாள் ....
குதித்தாள் ...
மழையோடு
அவ்வளவு அழகாய்
பேசினாள் ...
அவள் மொழி
புரிந்து – மேகமெல்லாம்
அவள் மேல் மட்டும்
பொழிந்தன ...
நனைந்தாள் ...
சிரித்தாள் ...
கொஞ்சி பாடியும்
ஆடினாள் ...
குடையோடு வந்து
அவள் முதுகில்
இரண்டு போடு போட்டு
இழுத்து சென்றார்
அவள் தந்தை ..
அழுதுகொண்டே
உள் சென்றாள்
இரண்டு வயதுச் சிறுமி .
வெறுத்துப் போய்
நின்றது மழை ....!
- எபி