பெண்மையின் பரிகாசம்....!

என் இரண்டொரு
கவிதைகளைப் படித்துவிட்டு
தன்னைப் பற்றி
கவியெழுதப் பணிக்கும்
தோழியை நினைக்கையில்
என் மனத்தின்
ஏதோ ஒரு மூலை
குற்றவுணர்வால்
நிரப்பப்படுவதாய்
உணர்கிறேன்.
ஒரு கவிக்கான
கருப்பொருளாய்க்
கருக்கொள்ள
பெண் என்ற
ஒரு தகுதி
போதுமென்றெண்ணினாளோ...?
அன்றி
பெண் தேகம்
உதிர்க்கும் வியர்வைத்துளி நிரப்பிக்
கவியெழுதும்
பெண் பித்தன்
நானென்று எண்ணினாளோ..?
பெரும்பான்மைக் கவிகளின்
கன்னிக்கவிதை
கன்னியின்
கண் மையால்
தீட்டப்பட்டதென்பதை
மனம் ஏற்காமலில்லை..
அன்றியும்
பெரும்பான்மைக்குள்
அகப்படா ஒருவனாய்த்
திகழ்கையில்
எனக்குள்
ஒரு சேர ஒலிக்கிறது
மொழியின் காதலும்..
பெண்மையின்
பரிகாசமும்....!