கலவரமான மனம்
விழி நனைந்த கவிதைப் பக்கம்
விளையாட இங்கு துணையில்லை.
சுகம்நிறைந்த ஆன்மாவின் அகமாக,
பஞ்சினால் நெய்யப்பட்ட துணியில்
கனிந்த காதல் நூல்கொண்டு
நீ தைத்துக்கொடுத்த ஆடையின்
அளவு மாறிவிட்டபடியால்
அணியமுடியாமல் ஆகிவிட்டது.
முதல் பின்னல் இறுகி முடிந்ததால்
இணைந்த இணைப்பை முனைந்து,
பிரித்துத்தைக்கவும் முடியாமல்
விட்டுஎரியவும் வழியில்லாமல்
செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்
தொட்டுவிடத் துடிக்கும் வானம்போல்.