தூக்குக்கல்வி !!

தவழ்ந்தாடும் சிறுவயதில்
தலைக்கனமாய் படிப்பெதற்கு ?
தன்வாழ்வை பாசம்மறைக்க
தலைஅடகில் சேர்த்தினாரே !
ஆடியோடி விளையாடக்கூட
ஆரம்பப் பயிற்சிதந்து,
எட்டாவது வரையிலே
எப்படியோ பலபெற்றேன் !
அதன்பின் அரசுத்தேர்வால்
அலைச்சலும் அதிகமாக,
இருவருடம் ஒருபுத்தகம்
இடைவிடா நெட்டுருத்தல் !
கடிகாரம் வேகமாக
கண்ணிமைக்க மறந்துபோக,
கண்ணாடி போட்டதாலே
கல்வியாளன் ஆனேனே !
தூங்கும் நேரம்மாற
தலையணையாய் புத்தகங்கள் !
தாய்தகப்பன் வந்தாலும்
தாவிச்செல்ல தடையேனோ ?
நான்காண்டு கடுங்காவல்
நாள்முழுதும் படித்ததாலே,
நடப்பறியாமல் அகராதியில்லா
நூலகமாய் நானானேன் !
பொறியியல் பெரும்படிப்பென
பெரியதொரு பல்கலைசேர்ந்தும்
புதிதாய்த்தெரிய ஆசையில்லை
புரிந்துகொள்ளவும் தெரியவில்லை !
புத்தகப்புழு ஆதலாலே
பக்குவம் துளியுமில்லை ?
பட்டெனத் தோல்விவந்ததும்
பறந்துவா தூக்குக்கயிறே !
சுமைகூட்டுஞ் சமுதாயத்தால்
சக்கையாக்குங் கூடமெல்லாம்
சரஸ்வதி படங்காட்டிச்
சம்பாதிக்கும் நல்லவர்கள் !
நெருக்கடிகள் பலதந்து
நொறுக்கிவிட வேண்டாம் !
நொடிவேகம் நகர்ந்தாலும்
நாடிபோல் இருக்கட்டும் !!