எங்கு போகிறாய் பறந்து ?

பிறந்த குழந்தையையும்
பிறப்பித்த குழந்தையையும்
காப்பகத்தில் விட்டுவிட்டு,
பயணப்படுகிறாய்
பன்னாட்டு கம்பனிக்குள்
பணம் தின்னும் கழுகாய் ...!
அரிதாய் நட்பு
அரிதார சுற்றம்
அதிகார மட்டத்தில்...
மேலே குழைவு
கீழே குரைப்பென
ஒழுங்கின்றி ஓட்டுகிறாய்
ஒவ்வொரு நாளையும் !
விழுந்தவனோ
வெட்டுபட்டுவனோ
கைநீட்டி உதவி கேட்கையில்
அவன் கைக்கடிகாரத்தில்
காலம் பார்த்துவிட்டு - உனக்குன்
சம்பள வெட்டே
நினைவுக்கு வருகிறது,
நிற்காமல் போகிறாய் !
குடலுக்கொவ்வாத
உணவு வகைகளை
கடலென தின்கிறாய்...
கடலளவு குடிக்கிறாய்...
அங்கங்கே அங்கங்களில்
ஓட்டை விழுந்த பின்பு
ஓட்டமெடுக்கிறாய்
மருந்தகம் நோக்கியோ !
மருத்துவனை நோக்கியோ !
சிபாரிசு
வாங்குவதிலும்
குடுப்பதிலும்
பேருவுவகை கொள்கிறாய் !
வரிசையில் நிற்பவனின்
வயிற்றில் அடித்துக் கொல்கிறாய்...!
அலைபேசியுன்
அங்கமாய் போயிற்று !
பணம் உந்தன்
எரிபொருளாய் ஆயிற்று !
வரும் காலங்களில்...
மனிதாபிமானம்
அடைத்து விற்கும்
வணிக வளாகம் வரவிருக்கலாம் !
மனிதா...
எல்லாம் மறந்து
எங்கு போகிறாய் பறந்து ?