மரம் காப்போம் ! - கே.எஸ்.கலை

நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள்
•
கல் அடித்து கனி பிடுங்கி
காயப் படுத்தி போனாலும்
துயரப் பட்டு துடிக்கவில்லை
வலி என்று கதறவில்லை...!
பூ சீவி கள் எடுத்து
பூரித்துப் போனாலும்
வெறி பிடித்துக் கத்தவில்லை
வேண்டாம் என்று சொல்லவில்லை !
வீடு கட்டி வாழ்வதற்கும்
பாடை கட்டிப் போவதற்கும்
கை அசைத்து காற்று வீசி
காத்திருப்பேன் காட்டுக்குள்ளே !
மணமாலை நீ சூட
மலர் மகளை நான் தருவேன்
மங்களமாய் வரவேற்க – வாழை
மரமாக நான் நிற்பேன் !
எரித்து நீயும் பசியாற
விறகாக நானிருப்பேன்
புசித்து நீயும் நலம் வாழ
இலை தந்து மருந்தாவேன் !
எழுதி நீயும் உயர்வதற்கு
ஏடாக நானிருப்பேன்
புழுதி பறக்கும் மண்மீது
பூங்காற்றை நான் தருவேன் !
என் தேகம் இல்லை என்றால்
உன் தாகம் தீராது தெரியாதா ?
பாகம் பாகமாய் அறுத்தாலும்
நிழல் தானே நான் தருவேன் ?
குளிர் காற்றும் குடி நீரும்
நானின்றி உனக்கேது ?
குடிசை வீடோ மாடி வீடோ
நானின்றி உனக்கேது ?
பூக்களால் வாசம் வீசி
மூங்கிலால் கானம் பாடி
மூலிகையாய் நோய் தீர்த்து
நீ வாழ நான் வாழ்வேன் !
ஏடுகளில் வாழவைத்து
காடுகளில் அழிக்கின்றாய்
கேடு கெட்ட மானிடமே
புத்தி கெட்டு போனதேனோ?
மரம் என்றால் வரம் என்று
மனம் நிறைய வாழ்த்துகிறாய்
பணம் கொஞ்சம் வரும் என்றால்
தரம் கெட்டு மாறுகிறாய் !
நான் வாழ ஒருபோதும்-நீ
துளி நீரும் தரவில்லை
நான் இன்றி போனாலோ
துளி நீரும் உனக்கில்லை !
கிளி குரங்கு நரி பருந்து
புலி சிங்கம் பூச்சி எல்லாம்
என் நிழலில் வாழும் போது
எனை அழித்தால் என்னாகும் ?
கொத்து கொத்தாய் பூக்கின்றேன்
கொப்பு கொப்பாய்க் காய்க்கின்றேன்
அத்தனையும் எடுத்துக் கொண்டு
எனை அழிக்க ஏன் வாராய் ?
தீயிட்டு கொளுத்திவிட்டு
நீ கண்ட மோட்சம் என்ன?
சோலை வனப் பாரெல்லாம்
பாலை வனம் ஆகாதா?
ஆறறிவு கொண்டவனே
அக்கறையாய் சொல்லுகின்றேன்
ஓரறிவு நான் அழிந்தால்
உனக்கில்லை வாழ்வென்று !
எண்ணற்ற விதை கொண்டு
மண் மீது வாழுகின்றேன்
தேவை கொண்டு வெட்டும் போது
ஒரு விதையை நட்டு விடு !
•
நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள் !