செல்லம்மா- கருத்துகள்

"நான் ஒரு தமிழ் வெறியன். நான் ஒரு தமிழ்ச் சுயநலவாதி" என்றெல்லாம் நீங்களே கூறிவிட்டீர்கள். இதற்கு மேலும் நான் என்ன பேச? தர்க்கம் பேச வந்தவளாக இருந்தால் மேலும் வளர்க்கலாம். நான் தர்க்கம் பேச வரவில்லை தர்மம் பேசவே வந்தேன். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். வாழ்க உங்கள் "தமிழ்வெறி"! தமிழச்சியான நான் தமிழைத் தாழ்த்திப் பேசுவேனோ? நான் விரும்புவது சக மொழிகளுக்கும் சம அந்தஸ்து, மரியாதை. நம் மொழியைப் போல மற்ற மொழிகளையும் நேசிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்றுதான் சொல்லவந்தேன். "என் மொழியை மற்றவன் புகழுவானொ?"

கொடுத்தால்தான் பெற முடியும். இதுவே இயற்கை விதி. முதலில் கொடுத்துப் பாருங்கள். எத்தனை பெரிய பாரம்பரியமாய் இருந்தாலும் அங்கே சுயநலம் என்ற ஒன்று வந்துவிட்டால் அந்த நீண்ட நெடிய வரலாறு அத்துடன் முடிந்துபோகும் என்பதும் இயற்கையின் சட்டமாகும். ஏன், மனித நேயமும் மனுதர்மமும் உலகில் தமிழனுக்குத்தான் இருக்க முடியுமோ? இரக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதம் தழைக்கும். மான உணர்வு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வீரம் இருக்கும். எப்படி ஆயினும் வாழ்க உங்கள் தமிழ் வெறி! வளர்க உங்கள் தமிழ்ச் சுயநலம்!

ஆஹா அருமை. ஆனால் சகோதரரே, உங்களின் இந்தப் பதில் எனக்கு வேறு சில கேள்விகளைக் கிளப்புகிறது. இதற்கும் பதில் கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தமிழ் மொழியானது பல்வேறு மொழிகளுக்கு ஆணி வேராக உள்ளது. தமிழில் இருந்துதான் பல்வேறு மொழிகள் உருவாகின என்பதை நானும் அறிவேன். ஆனால், மேலே கொடுத்துள்ள பதிலைப் பார்த்தால், "உலகில் உள்ள சகல மொழிகளுக்கும் தமிழ் ஒன்றே மூலம்" என்று சொல்ல வருவதைப் போல அல்லவா இருக்கிறது. அப்படியானால், இந்த உலகிலே தமிழைத் தவிர வேறு எந்த மொழியுமே தான்தோன்றி இல்லையோ? அல்லது,

"இல்லை இல்லை அப்படி இல்லை. வேறு ஏதாவது மொழியும் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவை எதுவுமே இன்று வழக்கில் இல்லை. இருப்பதற்கான ஆதாரமும் இல்லை. தமிழ் ஒன்றுதான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று கூறுகிறீர்களா?

சரி. தமிழ்தான் உலகின் சகல மொழிகளுக்கும் மூலம் என்று வைத்துக் கொண்டால், எதற்காக "தமிழிலேயே பேசுவோம், தமிழிலேயே எழுதுவோம், தமிழ் நாட்டில் தமிழை மட்டுமே பயன் படுத்துவோம்" என்றெல்லாம் கூப்பாடு போட வேண்டும்? தமிழ் பெற்றெடுத்த பிள்ளைகள் அல்லவா மற்ற மொழிகள்? அவற்றிலே பேசினால் எதற்காக நாம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும்? உலகின் சகல மொழிகளுக்கும் ஒலியையும் லிபியையும் கொடுத்து இன்றளவும் அதாவது சுமார் 100,000 ஆண்டுகளாக இன்னும் இன்னும் பரிணாம வளர்ச்சி கண்டு விழுதிறக்கிக் கொண்டே இருக்கும் தமிழை இந்த சுண்டைக்காய் மொழிகளால் என்ன செய்துவிட முடியும்? அப்புறம் எதற்காக தமிழைக் காப்போம் காப்போம் என்று அலற வேண்டும்? என்றால் வேற்று மொழிகளை ஆதரித்தால் தமிழ் அழிந்து விடுமோ? எனில் தமிழைக் காட்டிலும் ஏனைய மொழிகள் இன்றைக்கு வலிமை பொருந்தியனவாக உள்ளனவோ?

தமிழ் மொழியானது, உலகில் சகல மொழிகளுக்கும் மூலமாக ஆதாரமாக ஆணிவேராக இருக்கிறது. தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களைக் கொடுத்தது என்கிற ஆராய்ச்சிக் குறிப்புகள் தமிழே உலகின் தொன்மை வாய்ந்த மொழி என்பதைத்தான் காட்டுகின்றனவே அன்றி அதை மட்டுமே கொண்டு தமிழ்தான் உலகில் உயர்ந்தது என்ற உங்கள் எண்ணத்தை நியாயப் படுத்திவிட முடியாது.
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என்பதும், உலக மொழிகளுக்கெல்லாம் குரல்வளையாகவே எங்கள் தமிழ்தான் இருக்கிறது என்பதெல்லாம் ஒரு சிறப்பு என்பதை முழுமையாக மறுத்து ஒதுக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், தமிழ் தான் உயர்ந்தது என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் காரணம் உலக மொழிகளுக்கெல்லாம் வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறது, உலகின் தொன்மை வாய்ந்தது என்பவை மட்டுதானா? அல்லது தமிழின் உள்ளடக்கத்தையும் வைத்தா? அதாவது தமிழ் தன்னகத்தை வைத்திருக்கும் பெருமைக்குரிய வியத்தளுக்குரிய அழியா இலக்கியங்களும் ஒரு காரணமா?

ஒரு மொழி உயர்வு பெறுவது அதன் லிபிகளினாலா? அல்லது அந்த லிபிகள் தாங்கி நிற்கும் இலக்கியத்தாலா?

நிச்சயம் ஒரு மொழி உயர்வு பெறுவதென்பது அதன் உள்ளடக்கமான இலக்கியங்களால்தான் இருக்க முடியுமே தவிர வெறும் சொற்களால் அல்ல. ஒரு மொழியின் சொற்களை அல்லது எழுத்துக்களான லிபிகளை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது தாங்கிச் செல்வது நிச்சயம் இலக்கியங்கள் தான். அந்த இலக்கியங்கள் எவ்வளவு உயர்வானவை உன்னதமானவை தரமானவை என்பதைப் பொறுத்தே அவற்றை அடுத்த தலைமுறை கவனிக்கும் போற்றும் பாதுகாக்கும் தானும் அதை அதற்கு அடுத்த தலைமுறையை நோக்கி நகர்த்தும். எனவே ஒரு மொழி உயர்வு பெறுவதென்பது அதன் உள்ளடக்கமான ஈடு இணையற்ற இலக்கியங்களாலேயே என்பது புலனாகிறது. அப்படி எனில் தமிழ் மற்றைய மொழிகளுக்கு வார்த்தைகளை வழங்கி இருக்கிறது என்பதைத் தாண்டி தமிழ் எந்த விதத்தில் மற்ற மொழிகளைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது?

இதர மொழிகளின் சொற்கள் தமிழ்கொடுத்த அல்லது தமிடம் இருந்து பெற்ற இரவல் என்பதை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டுப் பார்ப்போமே ஆனால், தமிழைப் போலவே சக மொழிகளும் சொற்களை, லிபிகளைப் பெற்றிருக்கின்றன. வள்ளுவனும் இளங்கோவும் ஔவையும் புகழேந்தியும் பாரதியும் பிரிட்டனில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதி இருந்தாலோ அல்லது வேறு மொழிகளில் எழுதி இருந்தாலோ அவை தானே உயர்ந்த மொழி? அவை தானே உயர்ந்ததாக இருக்க முடியும்? எந்த மொழி முதலில் பிறந்தது, எந்த மொழி எதில் இருந்து பிறந்தது என்பதைக் காட்டிலும் எந்த மொழி உன்னதமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதல்லவா ஒரு மொழியின் சிறப்பை நிர்ணயிக்க முடியும்? அப்படிப்பார்த்தால், நம் மூத்தோர்கள் வேற்று மொழியில் பிறந்து அவற்றிலே எழுதி இருந்தால்? எதை வைத்துத் தமிழைத் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பீர்கள்? வெறும் ஆண்டுகளை மட்டுமே வைத்தா?

நமது அதிர்ஷ்டம் அவர்கள் நம்மொழியில் பிறந்து விட்டார்கள். அவ்வளவே. தமிழ்தான் சகல மொழிகளுக்கும் மூலம் என்றும் தாய் என்று மட்டும் வாய் கிழியக் கத்துகின்ற தமிழன் அந்த தமிழில் இருந்து பிறந்த மற்ற மொழிகளை வெளியேற்றத் துடிப்பதும் வெறுப்பதும் எதனால்?

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்ப் பற்றல்ல, அது வெறி. மத வெறியைப் போலவேதான் இதுவும். எப்படிப் பட்டப் பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாம் தமிழனாய் மட்டுமே இருக்க விரும்புகிறோமா அல்லது இந்தியனாகவும் இருக்க விரும்புகிறோமா? இந்தியனாகவும் இருக்க விரும்பினால், நிச்சயம் மற்ற மொழிகளுக்கும் நாம் முக்கியத்துவம் தந்தே ஆகவேண்டும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன், அவன் அவன் தனது மொழியே சிறந்தது என்றும் (அவனவனுக்கு அவனவன் மொழி உயர்ந்தது தானே? அது எதிலே இருந்து பிறந்திருந்தாலும்.) எனது மாநிலத்தில் எனது மொழியை மட்டுமே எங்கும் பயன்படுத்துவோம் என்றும் அடம் பிடித்தால், தமிழ் நாட்டுக் காரன் கர்நாடகாவுக்கும், கர்நாடகா காரன் பீகாருக்கும் போக முடியுமா? அவனவன் அவனவன் மாநிலத்துக்குள்ளேயே (வேறு நாட்டினர் போல) உட்கார்ந்து கொள்ள வேண்டி வரும். அப்படியே வளர்ந்தால், இந்தியா என்ற நாடு இருக்காது. அவனவன் அவனவன் மாநிலத்தில் இருந்தபடி விக்கிக் கொண்டுதான் சாக வேண்டும். நம் மொழி உயர்ந்ததென்ரால், பக்கத்து மாநில மொழிகளை எதற்காக மறுதலிக்க வேண்டும்? என் மொழியைத்தான் நான் நேசிப்பேன் என் மொழியைத்தான் நான் பேசுவேன் என்று சொன்னால், நம் மொழியை உச்சரிக்க மற்றவனுக்கு மட்டும் என்ன தலையெழுத்து? பிற மொழிகளை போற்றாமல் நம் மொழியை எவனும் போற்ற மாட்டான். "அயல்நாட்டுச் சாத்திரங்கள் தமிழில் கொணர்வோம்" வேற்று மொழியை அனுமதித்தால் வேற்று மொழியைப் பேசினால் தமிழ் அழிந்துபோகும் என்று கூப்பாடு போடுகிற நீங்களா பாரதியின் கனவை நனவாக்க முடியும்? அப்புறம் எப்படி வேற்று மொழிச் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வருவீர்? நாம் மட்டும் அண்டை மொழிகளை அனுமதிக்க மாட்டோம், பேச மாட்டோம், ஆதரிக்க மாட்டோம் ஆனால், நமது மொழியை மட்டும் உலகமே தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமோ? தமிழ் நாட்டிலே தமிழ் மட்டுமே என்று இனியும் பேசிக்கொண்டு இருந்தோம் என்றால், நிச்சயம் எதிர்காலத்தில் தமிழ் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ் இருக்கும். இது தமிழுக்கு தமிழனே தோண்டிக் கொண்டிருக்கும் சவக்குழி!

எனது கேள்விக்காக பெருந்தேடல் கொண்டு நெடிய பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

"உலகத்தில் பல மொழிகள் இருந்தாலும் தனிச் சிறப்பு கொண்டது எம் தமிழ் மொழியே என்று சொல்ல வருகிறார் கவிஞர் ! "
==============

கவிஞர் சொல்லி இருப்பது எனக்கும் புரிகிறது. ஆனால், "தமிழே தனிச்சிறப்பு வாய்ந்தது" என்று எப்படிச் சொல்கிறீர்கள்? எதை வைத்து எதன் அடிப்படையில் தமிழ் உலகில் உள்ள ஏனைய மொழிகளில் இருந்து தனித்து நிற்கிறது, தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறுகிறீர்கள்? என்பதுதான் எனது கேள்வி சகோதரரே! அப்படி என்ன மற்ற மொழிகளில் இல்லாத தனிச்சிறப்பு தமிழிடம் இருக்கிறது? அது எது? எப்படி? என்று கேட்கிறேன். நன்றி சகோதரரே!

"பாரத ரத்னா" கொடுக்கலாம்தான். ஆனாலும் உங்களுக்கும் உங்கள் கவிஞருக்கும் இத்தனைப் பேராசை கூடாதம்மா!

அழகான கவிதை அண்ணா! வாழ்த்துக்கள்.

உங்கள் தமிழ்ப்பற்றுக்கு பாராட்டுக்கள். எதுகை அமைத்து எழுதி இருந்தால் இன்னும் கவிதை உயர்வு பெற்றிருக்குமே சகோதரரே! நன்றாக இருக்கிறது.
ஒரு கேள்வி.
"பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு"
எதனால் இப்படிச் சொல்கிறீர்கள்? எதை வைத்து?? கொஞ்சம் விளக்குங்களேன்.

வார்த்தைகளை அடுக்கி இருக்கும் விதம் அழகு!

அதே நேரம், சில இடங்களில் கவிதைக்கு அழகு சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு மோனைகளை வலிய அமைத்திருப்பது கவிதையின் அழகைக் குறைக்கவே செய்கிறது.

பல கற்பனைகள் நிறைய எழுதிவிட்ட கற்பனைகள். ஆர்வமும் ஆற்றலும் உள்ளது. முயன்றால் இன்னும் நன்றாக எழுதலாம்.

வழக்கம் போல வாழ்த்துக்கள்.....

கவிதை அருமை!
மோனைகள் அழகு!

"தாரகை" -எந்தப் பொருளில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்?

உடல் குறைகளையும், உடல் வனப்பையும் வைத்து
விமர்சிக்கின்ற பிற்போக்குத்தனங்களில் ஒன்றே ஒருவரை "மலடி" என்று தூஷிப்பதும்....

உடற்குறை என்பது இயற்கை செய்கிற துரோகம். அது நாம் இழைக்கும் பாவம் அல்ல. பாவிகளைத் தான் தூஷிக்க வேண்டும். வஞ்சிக்கப் பட்டவர்களை நேசிக்க வேண்டும்.

மேலும் திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவை எல்லாம் ஒரு தனிமனிதரின் விருப்பமும் சுதந்திரமும் சார்ந்த விஷயங்கள். இவற்றில் மற்றவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லை.

சமூகத்தின் பல்வேறு பிற்போக்குத் தனங்களில் இதுவும் ஒன்று. இது மாற வேண்டும்!

தோழிக்கு வாழ்த்துக்கள்!


செல்லம்மா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே