எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா -...

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா.. தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா….

இருக்கும் அறிவை
மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும்
சண்டை ஓயாத
முரட்டு உலகமடா… தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா…

விளையும் பயிரை
வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்..
மனம் வெந்திடும் தோட்டக் காரனிடம்,
மிரட்டல் வார்த்தைகளாடும் - பல
வறட்டு கீதமும் பாடும்..
விதவிதமான பொய்களை வைத்து
புரட்டும் உலகமடா.. தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா..

அன்பு படர்ந்த கொம்பினிலே-ஒரு
அகந்தை குரங்கு தாவும்..
அதன் அழகை குலைக்க மேவும்..
கொம்பும் ஒடிந்து
கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்.. - சிலர்
குணமும் இதுபோல்
குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா.. தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா..

பதிவு : ஈஸ்வரன்
நாள் : 20-Jan-15, 3:30 pm

மேலே