வாழ்வில் நிறைந்தது தீப ஒளி! ************************************* கிழக்கே போகும் ரயிலில் மேற்கு நகர் மெயிலில் மாலை சூட்டிய மாப்பிள்ளை மாலை வருவதாய் வந்தது மடல்! மாலை நேர வெயில் ...
வாழ்வில் நிறைந்தது தீப ஒளி!
*************************************
கிழக்கே போகும் ரயிலில்
மேற்கு நகர் மெயிலில்
மாலை சூட்டிய மாப்பிள்ளை
மாலை வருவதாய் வந்தது மடல்!
மாலை நேர வெயில்
மாட்டு வண்டி சகிதாம்
பட்சணம் எடுத்து வச்சி
பயணம் துவங்கி ஆச்சி!
மல்லி வேட்டி மாமா
மல்லுக்கு நிக்கும் மாமி
சிட்டுகள் பட்டு கிட்டு
சிரிக்கும் கேலி இட்டு!
அளகாபுரி ரயில் நிறுத்தம்
அலைந்துத் தேடும் உறவுகள்!
ஆஆ அதோ ஆதவன்
அவனே நம் நாயகன்
ஆதவன் வந்தான் இறங்கி
ஆரவாரம் கொட்டி வரவேற்பு!
மாட்டு வண்டி ஏறி
மாப்பிள்ளை பயணம் துவங்க
மனசு குளிர்ந்த குடும்பம்
மகிழ்ந்து சேர்ந்தது இல்லம்!
ஓர விழி மாப்பிள்ளை கண்கள்
ஓடும் மனையாட்டி தேடி
கோதை நல்லாள் மான் விழி
கதவிடுக்கில் காதல் சொல்லும்.
ஆனிமாதம் சூட்டிய மால
ஆடிமாதம் குறுக்கிட்டதால
ஆவலைத் தேக்கி வைத்தார்
ஆசையைப் பூட்டி வைத்தார்.
இனிதே காலை புலர்ந்தது
இரவி கிழக்கே எழுந்தது
இனிய தீபாவளிப் பண்டிகை
இனிதே இன்று பிறந்தது!
அரிசியும் உளுந்தும் மசிய
ஆட்டி வைத்தார் மாமா
சுவைக்க நெய் இட்டு
சுட்டு வைத்தாள் மாமி!
சிந்தை மகிழும் மத்தாப்பூ
சீறிப் பாயும் ராக்கட்டு
சிவகாசி ஊசிப் பட்டாசு
சுட்டு மகிழ்ந்தான் கிட்டு!
சிவந்த மேனி பட்டு
சிலுக்குச் சட்டை போட்டு
கிலு கிலுக்கும் கொலுசு
கிறு கிறுக்கும் பேச்சு!
அருவியெனக் கங்கைக் குளியல்
அணிவதற்குப் புது ஆடைகள்
ஆடைக் கட்டும் ஆவின் பால்
மேடைக் கட்டும் பட்சணங்கள்.
விஞ்சும் பளிங்குக் கட்டில் சீரமைப்பு
பஞ்சு மெத்தைத் தலை அணைப்பு
காஞ்சி பட்டுத் துகில் விரிப்பு
காம்பு அகற்றி மலர் மிதப்பு.!
அத்தான் வந்த பூரிப்பில்
ஆடிக் களித்தாள் பெண்பிள்ளை
அன்பின் பிணைப்பில் முகிழ்ந்து
ஆடி முடித்தார் மாப்பிள்ளை!
உள்ளத்தே பூத்தது மத்தாப்பூ
வானைத் தொட்டது மகிழும்பூ
வானவில் வண்ணம் போல
வாழ்வில் நிறைந்தது தீப ஒளி!