எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மின் விபத்து ஏற்படாமல் இருக்க எவ்வாறு செயல்பட வேண்டும்?...

மின் விபத்து ஏற்படாமல் இருக்க எவ்வாறு செயல்பட வேண்டும்?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் விபத்துகளை தடுப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எனவே மழை காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு கீழ்கண்ட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள்.

* ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள்.
*ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
*ஈ.எல்.சி.பி.யை (மின் கசிவு தடுப்பான்) பயனீட்டாளரின் வீடுகளில் உள்ள மெயின் ஸ்விட்சு போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர்.
*ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.
*சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள்.
*ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.
*மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள்.
*மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. *மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், ‘ஸ்டே’ வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
*மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள், அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளியுங்கள். மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும். மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.

அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமையவேண்டும். மின்சார தீ விபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக ‘கான்கிரீட்’ கூரையிலான பெரிய கட்டடம் வீடு போன்ற பெரிய கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன், போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள். இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 27-Sep-17, 4:25 pm

மேலே