மெய்யில்லாத உயிர் எழுத்துக்கள்(குழந்தை தொழிலாளர்கள்)...???

துள்ளி குதித்து பள்ளி செல்ல இயலாத
என் தம்பி தங்கைகளை கவனியுங்கள்....!!!!

செம்மண் குழைத்து செங்குருதியிட்டு,
வெப்ப சூட்டில் வெந்து
அக்னிபறவைகளாக பறக்கும்,
செங்கல்சூளை செங்காந்தள் பூக்கள்...!!

கை மருதாணி காயும் முன்பே,
கைரேகை மறைய மறைய
பத்துபாத்திரம் தேய்க்கும்,
பத்தரை மாதத்து தங்கங்கள்...!!

பள்ளி அறியா வயதில்,
துள்ளி குதித்து விளையாடாமல்
கல் சுமந்து உருகி போய்கொண்டிருக்கும்
சின்னஞ்சிறு பிஞ்சு கவிதைகள்...!!

கரி பிடித்துப்போன கைகள்,
கந்தக மலர்களின் வாசம்,
தீயை தினமும் வெறுத்து ரசிக்கும்,
பட்டாசு தோட்டத்து பன்னிர்பூக்கள்...!!!

இன்னும் சொல்லமுடியாத எத்தனையோ
இந்தியாவின் வருங்கால தூண்கள்
தூக்கம் தொலைத்து பசி போக்க
மெய்யில்லாத உயிர் எழுத்துக்களாக
வெம்பி நிற்கின்றன...!!??

மெய்யில்லாத உயிர் எழுத்துக்களை,
முடியுமெனில்,
உயிர்மெய் ஆக்குவோம்...!!!!

எழுதியவர் : மனோ ரெட் (15-Feb-13, 12:42 pm)
பார்வை : 180

மேலே