கீர்த்தனா என்னும் ஆந்திர மிளகாய்

பெங்களூர் - fridge ல் வைத்த ஆப்பிள் போல எப்பொழுதும் பெண்கள் புதுசாக இருக்கும் ஊர் . அதுவும் ஜோதி நிவாஸ் காலேஜ் அருகில் சென்று விட்டால் கால நேரம் தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . இனி காலேஜ் பக்கம் போனால் ப்ரொஜெக்டில் இருந்து நீக்கி விடுவேன் என்று அன்பு கட்டளை மேலதிகாரியிடம் இருந்து வந்த காரணத்தினால் வாழ்கை வறட்சியாக போய்கொண்டிருந்த கால கட்டம் .

அப்பொழுது ஜோதி நிவாசில் உள்ள அத்தனை அழகான பெண்களும் ஒரு உருவில் வந்தார்கள் புதிதாக சேர்ந்த பெண்ணின் வடிவில் . பெயர் கீர்த்தனா , பேரை சொல்லும் போதே ஒரு இசை கேட்கிறது அல்லவா? எனக்கு ஒரு இசை கச்சேரியே கேட்டது .

ஆந்திரா, உலகுக்கு தந்த தேவதை . ஆந்திரா பருப்பு சாதத்துக்கும் , கோங்கிறா சட்டினிக்கும் , பெண்களின் அழகுக்கும் எதோ சம்மந்தம் இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை என்னை கண்டுபிடிக்கச் செய்து , என்னையும் ஒரு விஞ்ஞானி ஆக்கினாள்.

என் மேனேஜர் வாழ்கையில் செய்த ஒரே நல்ல காரியம் , அவளுக்கு பயிற்சி கொடுக்கும் படி என்னைப் பணித்தது . விளைவு ,எனக்கு அரைகுறையாக தெரிந்த வேலையும் சேர்த்து மறந்து போனது .

வானத்தில் உள்ள தேவதைகள் எல்லாம் கூட்டு முயற்சியாக என்னை சபித்த பொன்னாளில் கீழ்க்கண்டவை நடந்தது

கீர்த் , கீஈர்த் , கீஏஏஏஏஎர்த் கோபமாய் திரும்பி பார்த்தாள் , "வாட் யு வான்ட் ? "

அது தமிழ் அவள் அரைகுறையாக கற்றுகொண்டிருந்த சமயம், புரியாது என்ற தைரியத்தில் "நீதான் வேண்டுமென்றேன் ".

சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது "வென் யு வான்ட் ? "

அருகில் இருந்த தமிழ் தெரிந்த என் சக பணியாளர்கள் , உற்சாக கூச்சலில் கைதட்டி ,நடந்ததை படம் வரைந்து பாகம் குறித்து அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்கள் .

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நேரம் இருக்கும் கைதியின் மனநிலையில் நான் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன் .

கோபமும் , வெட்கமும் , போட்டிபோட அவர்கள் சொன்னதை கவனித்தவள் , குறுநகையுடன் அருகே வந்து காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள் "வென் யு வான்ட் ? "

மெலிதாய் தொடங்கிய கீர்த்தனா என்னும் இசை உடல் , மனம் முழுவதும் வியாபித்து பரவ ஆரம்பித்தது .

ஆந்திராவின் நிலப்பகுதியும் , மகேஷ் பாபுவும் , இலியானாவும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனார்கள் . தெலுங்கனா பிரச்சனைக்காக சோறு தண்ணி இல்லாமல் கவலைப்பட ஆரம்பித்தேன் .

தமிழ் பேசும் போது கூட அநியாயமாக ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு "லு " சேர்த்துக்கொண்டேன் .

கவிதை போலத்தான் வாழ்கை போய்க்கொண்டிருந்தது

யாரும் அற்ற தனிமையில் , மிகவும் அந்தரங்கமான நிலையில் காதலுடன் , நான் கீர்த் என்று அழைக்கையில் என்ன "ஜனா" என்று அவள் கேட்கும் வரை .

பின் குறிப்பு : "ஜனா என் பெயர் அல்ல "

- பாவி

எழுதியவர் : பாவி (3-Jun-17, 4:07 am)
பார்வை : 573

மேலே