உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன - முலைகள்

இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்...
வாழ்க்கையே... இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்
மலை முகட்டிலிருந்து ஒரு சிறு பாறையென
என்னை உருட்டித் தள்ளிவிடு
துயரங்கள் எழும்பி அடங்கும் கடலுக்குள்
உணர்ச்சிகளில் உடலை நீந்தவிடு
சிதிலங்களின் மறைவில் வாழப்பணி
முலைகள் பூக்கத் தொடங்கும் போது
பருவத்தின் படகில் வந்து மிதந்து பறித்துச்செல்
மலைகளின் உடலுக்குள்ளிருந்து புறப்படும்
மிருகங்களின் வாயினைச் சந்திக்கவை
இரத்தம் சூடாகிப் பிளிறும்போது
கண்ணாடிகளை அழைத்துவா எதிரில்
நெருப்புக்கங்குகளான எனது வார்த்தைகளாலேயே
என்னைச் சாம்பலாக்கித் தூவிவிடு
பிசாசுகள் கோஷமிட்டுச் செல்லும் தெருவில்
கடவுள் என்பவரின் சுவடுகளைக் காட்டு
உடலை எரியூட்டும் காதலோடு
வேசியாய் அலையவிடு தெருமுனைகளில்
பூமியெங்கும் இரத்தம் மடை திறக்கையில்
மானுடர்க்கு மத்தியில் ஒரு புல்லாக்கிக் கருக்கு
என்னை
நட்சத்திரங்கள் சுடும் உயரத்தில்
ஒரு பறவையாகி உடலை நீட்டவேண்டும்
ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு சூரியன் உண்டல்லவா?


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:58 pm)
பார்வை : 0


மேலே