என்ன வரம் வேண்டும் ...?

வரம் ஒன்று வேண்டும் என்றால்
என்ன வரம் கேட்பாய் குழந்தாய்?
மாணவனிடம் கேட்டேன்
வளமான கல்வி என்றான்
வரம் ஒன்று வேண்டும் என்றால்
என்ன வரம் கேட்பாய் தம்பி?
இளைஞனிடம் கேட்டேன்
அழகான மனைவியும்
ஒழுங்கான தொழிலும் என்றான்
வரம் ஒன்று வேண்டும் என்றால்
என்ன வரம் கேட்பாய் கண்ணே?
துணையிடம் கேட்டேன்
நாமும் குழந்தைகளும்
நான்கு பேர் முன்னிலையில்
நன்றாக வாழ வேண்டும் என்றார்
வரம் ஒன்று வேண்டும் என்றால்
என்ன வரம் கேட்பீர்கள் ஐயா?
வயோதிபரிடம் கேட்டேன்
வாழும் காலம் சிறிதானாலும்
வலுவான உடல் வேண்டும் என்றார்
எங்கிருந்தோ ஒரு குரல்....
வரம் ஒன்று வேண்டும் என்றால்
என்ன வரம் கேட்பாய் நீ ? என்றது
கேள்வியை உருவாக்குவதே
கேள்வியாதலால்
எதைக் கேட்பது?
எத்தனையைக் கேட்பது?
அதனால் .....
'கேள்வியே இல்லாத வாழ்க்கை' என்றேன்
'உன்னிடமே அது உள்ளது உணர்ந்துகொள்'
என்றது அந்தக் குரல்