கவிதை என்னை எழுதப் போகிறது!

இதுவரை
நான் கவிதையென்று
ஏதோதோ...எழுதினேன்...!!
இதோ..இப்போது..
கவிதை என்னை
எழுதப் போகிறது!
இந்திய தேசத்தின்
கடைக்கோடியில்
வங்காள விரிகுடா
சமுத்திர ஓரத்தில்
ஏகனின் பந்தத்தில்
ஏழ்மையின் சொந்தத்தில்
கடலும் கரையுமான
நெய்தல் பிரதேசத்தில்
மீனவக் குடும்பத்தில்
நான்காம் செல்வமாய்
நான் பிறந்தேன்..!
கடல் சென்ற தந்தை
கரை திரும்பும் வரை
களிப்பில்லை-அதுவரை
காலி வயிறும்
காலத்திற்கு நிரம்புவதில்லை!
கடனரிசி வாங்கி
உலையரிசி பொங்கி
ஊட்டிவிட்டு
உறங்க வைப்பாள்
என்னைப் பெற்ற பேரரசி!
இல்லம் திரும்பிய
தந்தையைப் பார்த்து
ஏழ்மை சிறிது வெளியேறும்
சோறே மீனாம்...
மீனே சோறாம்...
எமதுணவில்!
ஒரு வயிறு போதாது
துடிக்கும் மீனறுத்து சமைத்து
கொதிக்கும் குழம்பு ஊற்றி
சுவைக்க ஒரு வயிறு போதாது!
குடிசை வீட்டின் குளுமையில்
குறும்புகள் புரியும்
எலிகளின் தொல்லையில்
மண்ணில் கால்கள் புதைத்து
தூங்கும் தூக்கத்திற்கு
ஈடான சுகம் இதுவரை
கண்டதில்லை!
அதிகாலை இறை வணக்கம்
அடுத்தது மார்க்க கல்வி
அதைத் தொடர்ந்து...
பச்சை வயல்களை ஊடறுத்து
இயற்கையை இரு கண்களிலும்
ருசித்துக் கொண்டு
கால்நடையாய் சென்று
பயில வேண்டும் உலக கல்வி!
அடங்காத சினம்
பொறுக்காத பொறுமை
தாளாத தன்மானம்
தாங்க முடியா அநீதி
இத்தனையும்
நல்லவர்களிடத்தில் நன்மதிப்பையும்
மற்றவரிடத்தில் பகைமையையும்
பெற்றுத் தந்தது!
கவிதையை கற்றுத் தந்தது எது???
பதின்ம வயது பருவத்தில்
பள்ளிவாசல் திறப்பு விழா காண
சிறப்பு மலரில்
சிறியதாய் அரங்கேறியது
என் கவிதை!