பா. சிவந்தி ஆதித்தனார் பற்றிய இரங்கல் கவிதை
வானுயர்ந்த வள்ளல் வானுறைந்தார் !
காயாமொழியில் பிறந்து
தாயாய் தமிழ் வளர்த்தார் !
தரிசுக் காட்டில் கல்விப் பயிர் விதைத்தார் !
தேரிக்காட்டில் கல்வித் தேர் இழுத்தார் !!
உடற்பயிற்சிக் கல்வியும் உயர் கல்வியே
என்றுரைத்து அதற்கும் உன்னதம் சேர்த்தார் !
கல்விக்கண் தந்த இவர் இன்னுமொரு காமராஜர் !
கால்பந்து விளையாட்டிற்கு சற்றும் சளைத்ததல்ல கைப்பந்து என்று
அகண்ட பாரதமெங்கும் அதைப் பரவலாக்கினார் !
அதற்கு புரவலரும் ஆனார் !!
கரிசல் காட்டு கபடியை கடல் தாண்டச்செய்தார் !
உலகளாவிய அங்கீகாரம் பெற்று அதை
ஒலிம்பிக்கில் ஓளிபெறவும் செய்தார் !!
மணிப்பிரவாளத்தில் நடை தடுமாறிய தமிழை
அணிப்பிறழா தமிழாக தாராளமயமாக்கி
அழகு தமிழை பழகு தமிழாக்கி
தமிழ் செய்தித்தாள் வாசிப்போரையும் ஏராளமாக்கினார் !
: 2 :
வறியோர்க்கு உணவளித்து
வானுயர ராஜகோபுரம் அமைத்து
ஏழைக்கு எழுத்தறிவித்து
பாரதியின் சொல்லுக்கு உயிர் அளித்தார் !
எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரில் ஒருவர்
செந்தூரில் கற்றவரே !
தெற்கத்தி சீமையின் மென்தென்றல் காற்றவர் !
தென்பாங்கு பாட்டவர் !!
கடை ஏழு வள்ளலுடன்
கொடை கடைத்தேறிவிட்டதென்றவர்கள் மத்தியிலே
இன்னொரு பாரியும், காரியும் வல்வில் ஓரியுமாய்
வளம் வந்த வள்ளலவர் !
பன்முகத்திறமை கொண்டவரை நாடிச்சென்றோர்,
பொருள் வேண்டிச்சென்றோர்
தன்முகம் வாடித்திரும்பியதில்லை !
சின்ன அய்யா என்றழைத்தால்
அன்னையாய் வந்து நிற்பார் !
: 3 :
கொடுத்து சிவந்த கரம் கண்டு
ஆன்றோர் இவரை சிவந்தி என்றனரோ !
பகலவனென கல்வி அறிவு தந்ததனால்
சான்றோர் இவரை ஆதித்தன் என்றனரோ !!
கலைத்துறையினருக்கு இவர் ஓர் கலங்கரைவிளக்கு ! - அங்கே
கரை காணமுடியாமல் தத்தளித்தவர்களும் இல்லை !!
இவரை இனம் காணாமல் செல்ல எத்தனித்தவர்களும் இல்லை !!!
ஆட்சிமாற்றங்களும் வரும் காட்சிமாற்றங்களும் இவரின்
மாட்சிமையை குறைத்ததில்லை !
இடி போன்ற செய்திதனை எம் தலையில் இறக்கிவைத்து
மலை சாயின் நிலை சாயா மாமனிதர் தலை சாய
காலக்கணக்கனின் கணினி செய்த பிழை எதுவோ !
காலனையும் தாண்டி காலம் உம்மை தாங்கிநிற்கும் !
பொய்யா மொழிப்புலவன் உரைத்தது உண்மையெனில்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவரே
இனி நீர் வானுறைந்து வாழ்வீர் அய்யா !
: 4 :
சிந்தனையின் சிறு கீற்று, நிந்தனை இல்லை இது
அங்கதமாய் சொல்லவில்லை, ஆதங்கமாய் கேட்கின்றேன்
செய்திகளை முந்தித்தரும் தந்தியே !
மாமனிதர் மரணித்த செய்திதனை
இருபது வருடங்கள் சற்றே பிந்தி தரக்கூடாதா ?