கவிதை அரங்கேற்றம்..!

நானொன்றும்
புகழ்பெற்ற கவிஞனல்ல....எனினும்
நான் எழுதிய சில
கவிதைகளைக் கண்டு மகிழ்ந்து - என்னைக்
கவி பாட அழைத்திருந்தனர்
கவியரங்கம் ஒன்றில்
அழைப்பிதழ் அனுப்பித் தந்து.....!

சற்றே கால தாமதமாகச்
சென்று அரங்கம் சேர்வதற்குள்
கவியரங்கம் ஏற்கனவே தொடங்கியிருந்தது...
கவிஞர்கள், சுவைஞர்கள் எனப்
பெருங்கூட்டமே திரண்டு
கூடியிருந்த மாபெரும் சபைதனில்
கவிஞர்கள் பலரும் தம்
கவிதைகளை அரங்கேற்றினர்
பலத்த கரகோஷத்திற்கிடையே....!

என் முறையும் வந்தது....
மேடையேறினேன்....
கவிதை கொண்ட காகிதத்தைப் பிரித்தேன்...
மனதுக்குள் வாசிக்கத் துவங்கினேன்....!
சில நிமிடங்கள் தொடர்ந்தது என் மவுனம்.....
மேடையிலும்.....பார்வையாளர் அரங்கிலும்
தொடங்கியது சலசலப்பு....!

மேடையில் சிலர் பேசினர் தங்களுக்குள்....எனினும்
என் காதுகளை அவைத் துளைத்திட்டன.....
"என்ன திமிர் இவனுக்கு...?
மேடையேறி மவுனம் சாதிக்கிறான்....!"
"மேடை நாகரீகம் இல்லாத
இவனை யார் கவிதை பாட அழைத்தது...?"
இன்னும் பல விமர்சனங்கள்.....
பார்வயாளர் தரப்பிலிருந்தும்
பாய்ந்து வந்து என் செவிப்பறையைத் தாக்கின...!
"இவனெல்லாம் எதற்கு
கவிபாட வந்தான்...?"
"கவிஞர் பெருமக்கள் கூடி
கவிபாடிடும் சபையில்
காட்டான் இவனுக்கென்ன வேலை...?"
"கவிதை பாடத் தெரியாத
கபோதி இவனுக்கு
கவியரங்க மேடை ஒரு கேடா...?"

இன்னும் பல அர்ச்சனைகள்
சுற்றிலும் எனைச்
சூழ்ந்து கொண்டிருக்கையில்
வாய்ப்பு தந்து மேடையேற்றி
என்னைக் கவிபாடச் செய்த
கவிஞர் என்னருகில் வந்தார்...!
பதறிய நிலையினராய்
என் பக்கம் நெருங்கி வந்து கேட்டார்...

"என்ன நேர்ந்திட்டது உனக்கு....?
ஏன் என் மானத்தை
சபையினில் சந்தி சிரிக்கச் செய்கிறாய்...?"
அவர் மேலும் ஏதோ
சொல்ல வாயெடுக்குமுன்
நான் கூறினேன் அவரிடத்தில்....
பொறுமையாயிருங்கள்...
இப்போது கவி பாடுவேனென்று...

என் பதிலில் அரைகுறையாய்
திருப்தியடைந்த அவரும்
அரங்கில் அனையோரையும்
அமைதிகாக்கும்படி வேண்டினார்...
அரங்கில் சற்றே
அமைதி திரும்பிட
அவையோரை நோக்கி நானும்
கவிபாடத் துவங்கினேன்....

உணர்ச்சிகரமாய் பாடி முடித்தேன்....
கேட்டதும் அனைவரின்
முகத்திலும் வியப்பின் குறியீடுகள்....!
சற்று நேரத்திற்கு முன் எனைத்
தூற்றி ஆர்ப்பரித்து அடங்கிய சபை
இப்போது மீண்டும்
ஆர்ப்பரிக்கத் தொடங்கியது
எனை வாழ்த்திக்
கரவொலியினில்......!

கவிதையின் வரிகள் இவைதாம்...

தலைப்பு: மவுன மொழியில் ஒரு கவிதை....!

"மவுனம் என்பதே வார்த்தைகளற்ற
ஓர் உணர்ச்சிக் கவிதை தான்....!
மவுன மொழியினில்
கவி பாடிய என் மீது
உதட்டு நாண்கள் கொண்ட
உங்கள் வாய்விற்களிருந்து
பாய்ந்து வந்த வார்த்தை அம்புகள் -எனைப்
புண்ணாக்கிப் பிணமாக்கின....எனினும்
என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது
ஆம்...
பொறுமையிழந்து நீங்கள்
ஆர்ப்பரிக்கத் துவங்கு முன்....
என் மவுனம் இச்சபை கலைக்கும் முன்...
என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது...!"

எழுதியவர் : அபுஸாயிமா (18-May-13, 5:43 pm)
சேர்த்தது : abusaaema
பார்வை : 227

மேலே