எத்தனை எத்தனை விதங்களில் போதை
எத்தனை எத்தனை விதங்களில் போதை
மொத்தமாய் மக்களை இடறிடச் செய்யுது
முத்துப் பிள்ளைகள் கொடுத்திடும் வாதை
செத்தால் தேவலாம் என்றெண்ண வைக்குது.
பள்ளி நாட்களில் எவர்க்கும் புரியாமல்
வெள்ளைப் பசையது வேடிக்கை விதைக்குது
அள்ளி இன்பத்தை அடக்கமாய் கொடுத்து
கிள்ளி மூளையைக் கிறங்கிட வைக்குது.
அரும்பிடும் மீசை வந்த வயதினில்
விரும்பிடும் பெண்ணையும் விட்டு விலகியே
மருந்தகம் சென்று மறைத்து வாங்கி
அரும்பலம் தரும்தசை முறுக்கினைப் பெறுவார்.
மாத்திரை விழுங்கி மழுங்கிய வேளையில்
ஆத்திரம் கொண்டஓர் அன்பு மகனும்
சாத்திரம் படித்த தனது தந்தையை
நேத்திரம் குருடாகி நெஞ்சினில் உதைப்பான்.
தனக்கு மட்டுமே எனும்நிலை மாறி
உனக்கும் கொள்ளென நண்பரைக் கெடுத்து
குடியைக் கெடுக்கும் குடியினை விடவும்
கொடியது இந்தப் போதைப் பழக்கம்.
பெற்றோர் பாவம் இதை அறியாமல்
நற்றவப் புதல்வர் நலமாய் மகிழ்ந்திட
கற்றையாய் நோட்டுக்கள் அளித்து அவரை
முற்றிலும் நாசமாய் போகச் செய்கிறார்.
தாடி மீசைக்குள் ஒளிந்திடும் வாலிபர்
மூடும் பூச்சினில் மிளிரிளம் பெண்கள்
கூடிக் கொட்டம் அடிப்பது போதையில்
நாடிது போவது நற்பாதை என்பீரோ?
நாளைய சமூகம் நலமாய் இருந்திட
நால்வர் சேர்ந்து உழைப்பது அவசியம்
நாவினில் உறுதி சொல்வதை விடுத்து
நாமும் இதனை ஒழித்திட முயல்வோம்.