நெற்றிக்கண் திறப்பினும் பசி பசியே...!!!

பச்சை பிள்ளையின் அழுகுரலுக்கும்,
பரிதவிக்கும் தாயின் தவிப்பிற்கும்,
பஞ்சம் போக்க எவனும் வருவானோ
பசி நீங்க பழைய சோறு தருவானோ..??

எத்தனை ஆசைகளுடன் நாம் பிறந்தோம்
எப்படி மனிதரென நாம் வளர்ந்தோம்,
எங்கே தேடினால் விடை அறிவோம்
எவ்வாறு பூமி விட்டு விடை பெறுவோம்..!!

ஒட்டிய வயிறும்,
ஓடாய் தேய்ந்த உடலும்
மெலிந்த கன்னங்களும்
குழி விழுந்த கண்களும்
காய்ந்த சருகாய் முடியும்,
கிழிந்து தொங்கும் பாதமும்,
போதும் போதும்
எத்தனை காலங்களுக்கு தான்
பசிகொடுமையின் விலையில்லா
விளம்பர தூதர்களாய் நாங்கள்...!!

கர்ணன் வாழ்ந்த இப்பூமியில்
எச்சில் சோற்றுக்கும் வழி இல்லாமல்
ஏளனமாய் பிறந்த நாங்கள் தான்,
எட்டி மிதிக்கப்படும் பசி கொண்ட பூச்சிகள்..!!

ஒருவேளை ஆறறிவு இல்லாமல் இருந்தால்,
ஒருவேளை கஞ்சியாவது குடிக்கலாம்,
ஆறறிவு கொண்டதால் என்னவோ
வெக்கம் மானம் எல்லாம் புத்திக்கும் தெரிகிறது..!!

பசிக்காக குற்றவாளியாக்கினான்
கூத்தாடும் அந்த இறைவன்..!!
நாக்கை பிடுங்குமாறு நாங்கள்
கேள்வி கேட்கும் போது
அவன் நெற்றிக்கண் திறந்தால் சொல்வோம்
எங்களை படைத்தது தான் முதல் குற்றம்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (2-Aug-13, 11:05 am)
பார்வை : 171

மேலே