மர மண்டை மனிதனே..!

தேடலில் ஒரு சுகமிருக்கு காதலில்
தேங்கலில் ஒரு சுகமிருக்கு கண்களில்
கொடுப்பதில் ஒரு சுகமிருக்கு தானத்தில்
எடுப்பதில் ஒரு சுகமிருக்கு தாரத்தில்
இழப்பதில் ஒரு சுகமிருக்கு ஏழ்மையை
இருப்பதில் ஒரு சுகமிருக்கு வாய்மையை
சுமப்பதில் ஒரு சுகமிருக்கு தாய்மையை
சுடுவதில் ஒரு சுகமிருக்கு மடமையை
படைப்பதில் ஒரு சுகமிருக்கு கவிதையை
கிடைப்பதில் ஒரு சுகமிருக்கு நண்பனை
உடைப்பதில் ஒரு சுகமிருக்கு தோல்வியை
குடைவதில் ஒரு சுகமிருக்கு செவியினை
படிப்பதில் ஒரு சுகமிருக்கு தமிழினை
பிடிப்பதில் ஒரு சுகமிருக்கு யாழினை
வருவதில் ஒரு சுகமிருக்கு புகழினை
போவதில் ஒரு சுகமிருக்கு நோவினை
இருட்டிலே ஒரு சுகமிருக்கு முத்தமாய்
குருட்டிலே ஒரு சுகமிருக்கு தூக்கமாய்
காட்டிலே ஒரு சுகமிருக்கு மொத்தமாய்
காற்றிலே ஒரு சுகமிருக்கு சத்தமாய்
காணலில் ஒரு சுகமிருக்கு கற்றோரை
பேணலில் ஒரு சுகமிருக்கு பெற்றோரை
சுற்றுகிற உலகிலே பலசுகமிருக்கு உனக்கு
சுருக்கமாய் ஒரு சுகம்தேடி சுற்றுவதெதற்கு..?
மற்றவரின் சுகம் தொலைக்கும்
மர மண்டை மனிதனே..!