ஆசிரியர் தின வாழ்த்து .....!! ( செப்டம்பர் -5 )

அறியாமை இருள் நீக்கி
அறிவொளி கொடுக்கும்
ஞாயிறு நீ .....!!

ஏட்டுக் கல்வியோடு
நல்லொழுக்கம் போதிக்கும்
ஞானி நீ ....!!

வருங்கால சமுதாயத் தூண்களை
பாங்காய் செதுக்கும்
சிற்பி நீ ......!!

மாணவர் மனமெனும் களர்நிலத்தை
பண்படுத்தி விளைநிலமாக்கும்
உழவன் நீ ....!!

நெறிதவறும் மாணாக்கர்க்கு
அறிவுரை புகட்டி ஆதரிக்கும்
ரட்சகன் நீ ....!!

கற்போன் கண்டபடி பேசினாலும்
சொல்லாலடித்தாலும் கடமை தவறா
கர்ம வீரன் நீ ....!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கற்பித்து
ஏணிப் படிகளாய் ஏற்றுவித்து
கீழிருந்து அழகு பார்க்கும் குணாளன் நீ ...!!

முதுகுக்குப் பின்னே
முள்ளாய்க் குத்தினாலும்
தாயாய் மன்னிக்கும் தயாளன் நீ ....!!

தட்டுத் தடுமாறி தவிப்போர்க்கு
படிப்பில் பிடிப்பை ஏற்படுத்தும்
சாதகன் நீ......!!

திக்குத் தெரியாமல் திணறுவோர்க்கு
சாரதியாய் வழிகாட்டி ஒளிகாட்டும்
கலங்கரைவிளக்கம் நீ ...!!

அறிவுச் செல்வங்களை
அகில அரங்கில் நிலை நாட்டும்
போதி விருட்சம் நீ ...!!

மாணவர் சிகரம் எட்ட
தன்னலமில்லா உழைப்பைத் தரும்
தர்மவான் நீ ....!!

கல்விக் கூட கோவில்களின்
கருவறைத் தெய்வங்களே ...
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி
தொழுகின்றோம் ....!! -நும்
பணி சிறக்கட்டும் ...
வாழிய ....பல்லாண்டு ....பல்லாண்டு ..... !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Sep-13, 4:24 pm)
பார்வை : 5323

மேலே