கற்பில் சிறந்தவள் யார்

சிட்டுக் குருவியாய்
பட்டுப் பாவாடையில்
பவனிவந்த நாட்களில்
எங்களூர் திருவிழாக்களில்
தவறாமல் நடக்கும்
பட்டி மன்றங்கள்
கொள்ளைகொள்ளும்
என் மனதை................!

பல்வேறு தலைப்புகளில்
அனல்பறக்கும்
வாதப் பிரதிவாதங்கள்
ரசிக்க வைத்து முடிவில்
நடுவரின் தீர்ப்புக்காய்
ஏங்க வைக்கும்............!

`காதலித்து ஏமாற்றுபவர்
ஆண்களா பெண்களா,
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா என
உண்டது சமிபாடடைய
எத்தனையோ தலைப்புக்கள்..!

இறுதியில்
வாதப் பிரதிவாத
அடிப்படையில்
நடுவரின் தீர்ப்பு
எதிர்ப்பின்றி
ஏற்றுக்கொள்ளப்படும்
உள்ளே மனமின்றி....!

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா
தீர்ப்பு எப்போதும் மாதவிக்கே..!
அவள் சேற்றிலே முளைத்த
செந்தாமரை என்பதால் ..............!

யார் கற்பை யார்
சீர்தூக்கிப் பார்ப்பது...!
அப்போது உடன்பட்ட தீர்ப்பில்
ஏதோ ஒரு முரண்பாடு
பின்னைய நாட்களில்....
கால மாற்றமா
அறிவின் வளர்ச்சியா
எதுவென்று புரியாமல்..!

சந்தர்ப்பங்கள் கிடைத்தும்
கெடாதவள்
உண்மைப் பத்தினியா......!
சந்தர்ப்பங்கள் கிடைக்காமல்
நிரூபித்தலின்றி வாழ்பவள்
உண்மைப் பத்தினியா ......!

கேள்விகள் பல- ஆனால்
விடைகள் எப்போதும்
ஒன்றுதான் ...
இருவரும் பத்தினியாய்
இருந்தாலும்
கண்ணகிக்கே முன்னிடம்
எப்போதும் என்னுள்ளே ..!

சார்பு நிலையாளர்களால்
வாதங்களில் ஊக்குவிக்கப்படும்
பரத்தமை நிலையும்
தனிமனித ஒழுக்கச் சீரழிவும்
எப்போதும் என்னால்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
எத்தகைய காரணங்கள்
பின்புலத்தில் கற்பித்தாலும்..!!
-------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (27-Sep-13, 11:03 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 138

மேலே