ஆழிப் பேரலை (சுனாமி)
நீலக் கடலே ,
உனக்கு ஏன்
திடிரென
சிவப்பின் மேல்
இத்தனை வெறி,
பிஞ்சுக் குழந்தைகளின்
பச்சை இரத்தத்தை
வாரிப் பூசிக்கொண்டாய்,
உன்னின் உவர்ப்பு
உனக்கு போதவில்லையோ
மிச்சமாய்
எம்மக்களின் கண்ணீரை
குடித்துக் கொண்டிருக்கிறாய் .
வெடித்துப் போன
உப்பு பாளங்களில்
சிவப்பாய் படிந்து போன
உன் அலை நாவு
ருசி பார்த்த மனிதக் குருதி ,
மாண்டு போனவர்களுக்கான
எங்களின் ஒப்பாரியை
மௌனமாய்
பார்த்து கொண்டிருக்கிறது.
ஒப்புயர்வற்ற
மனித உயிர்கள்
குப்பை மேடாய்
மண்மூடப் படுகிறதே,
உன் அலைகளையும்,
கரைகளையும்,
ரசிக்கத்தானே
நாங்கள் வந்தோம்,
எங்கள் உயிர்களையே
விலையாக,
எடுத்துக் கொண்டாயே .
கடல் அன்னையே
எங்களுக்கு
வாழ்க்கையும் கொடுக்கிறாய்
எங்கள்
வாழ்க்கையையும் முடிக்கிறாயே
நாங்கள்
செய்த தவறுதான்
என்ன ?