பகிர்தல்

பகிர்தல்
***************
கடந்த காலத்தில் தங்களுக்கு உணவும், உறைவிடமும் தந்த பூங்கா தான் என்றாலும் இரண்டு வருடம் கழித்து அந்த பூங்காவிற்கு செல்லும் போது மிகவும் சந்தோஷமாய் சென்றார்கள் அந்த இரு நண்பர்கள்.

இரண்டு ஆண்டுகளிற்கு முன் எத்தனையோ நாட்கள் அந்த பூங்காவிலேயே படுத்துறங்கி , அங்குள்ள நீரை குடித்து பசியாறி, தங்கள் சோகங்களையும், கனவுகளையும் பரிமாறிக் கொண்டவர்கள். உறவுகள் உதாசீனம் செய்து உதறித் தள்ளிய இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த பூங்காவாயிற்றே. பள்ளிக்காலம் முதல் நட்போடு தொடங்கிவர்களுக்கு வேதனைகளும், சோதனைகளும் கூட சேர்ந்தே தான் வந்தது. இன்று நல்ல நிறுவனத்தில் அவர்களின் திறமைக்கு வேளை கிடைத்து விட்டது. பழசை மறந்தவர்களுக்கு மனிதத்தன்மை இருக்காது என்ற உணர்வே அவர்களுடைய பூங்கா பயணம்.

பூங்காவை அடைந்ததும் பூரித்து போனார்கள் இருவரும். மனசுக்கு இறக்கை கட்டி விட்டது போன்ற உணர்வு. அன்று தங்கள் வாழ்க்கையை போலவே முறையற்று கிடந்த பூங்கா இன்று நல்ல பராமரிப்போடு இருந்தது. காற்றின் அதிகமான ஆரவாரம் அவர்களை வாழ்த்தி வரவேற்பது போல உணர்ந்து, மகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார்கள். மரங்களோடும், செடி கொடிகளோடும், புற்களோடும் , பறவைகளோடும் ஏதேதோ பேசி லயித்திருந்தார்கள்.

பல நேரங்களில் மனிதர்களோடு பேசுவதை விட, மனிதர்களோடு பகிர்ந்து கொள்வதைவிட மரம், செடி கொடிகளோடு பகிர்ந்து கொள்வது சுகமாய்தான் இருக்கிறது.

Posted by Ram Ananth

எழுதியவர் : கே இனியவன் (23-Oct-13, 3:07 pm)
பார்வை : 96

மேலே