தனியே ஒரு குரல் -அஹமது அலி

போர்க்களத்தில்
அகிம்சைக்காய்
அறைகூவல் விடுக்கையில்
ஆயுதங்களின் முனையில்
மழுங்கியே போகிறது!
(**)
நீதியை போதிக்கும்
நிதர்சனக் குரல்
அநீதியின் ஆழத்தில்
அடக்கப்படுகிறது
அடங்கியே போகிறது!
(**)
அப்பட்டமான பொய்களை
முகம் காட்டி தோலுரிக்க
முன் கை நீட்டுகையில்
பொய்யர்கள் கூட்டம்
கை முறித்துப் போகிறது!
(**)
முட்டாள்கள் சபையில்
பேரறிஞனின் பேருரை
விழலுகிறைத்த நீராய்
வீணாய் போகிறது!
(**)
மூடர்களின் கூடாரத்தில்
முன்னோடிச் சிந்தனைகளின்
முடிச்சுகள் முறையாய்
அவிழாமலே போகிறது!
(**)
விஞ்ஞான விடயமும்
மெஞ்ஞானத் தடயமும்
பட்டவர்த்தனம் என்று தெரிந்தும்
பொய் ஞானப் போதை
தெளியாமலே போகிறது!
(**)
ஒவ்வொன்றுக்காய்
ஒவ்வொரு முறையும்
குரலெழுப்ப இவ்வுலகில்
எழுப்பும் குரல் மட்டும் தனியே!