ஒரு “பென்சிலின்” புலம்பல்

எலியும் பூனையும் விரோதி என்று
நம் முன்னோர் சொல்ல கேட்டதும் உண்டு.

கீரியும் பாம்பும் விரோதி என்று
பழக்கத்தில் நாமும் பார்த்ததுண்டு.

விரோதியை கூடவே கூட்டி செல்லும்
அபூர்வப் பிறவி நானாகத்தான் இருப்பேன்.

அறிவு ஜீவிகளின் புதிய கண்டு பிடிப்பின்
பலனாய் வந்த வினை தான் இது.

இதற்கு காரணம் மானிடர்களாகிய நீங்கள் தான்
என்றால் அது மிகையாகாது.

உங்கள் படைப்பை நீங்கள் பார்க்க
உதவும் கருவி நான்தான் என்பேன்.

அதில் மாற்றம் செய்ய நீங்கள் நினைத்தால்
உடனே நாடுவது என் விரோதியான ரப்பரைத்தான்.

உங்கள் கற்பனை கருவுக்கு ஒரு உருவம்
கொடுத்து ஜனிக்க வைப்பதும் நான்தானே.

ஜனித்த குழந்தையை கொஞ்சி குலவாமல்
அழிக்க நினைப்பது சரிதானா.

உன் மனதும் அறிவும் உறவு கொண்டதால்
வந்த பிறப்பு அதுவல்லவா.

உங்கள் விரல்களின் ஸ்பரிசம் என்னை
உரசியதால் வந்த இன்ப மழலை இது என்பேன்.

என் பின்னால் ஓட்டிக்கொண்டு என்னை
தொந்தரவு செய்யும் ரப்பரை நான் என் செய்வேன்.

அவனை கழட்டி விடவும் எனக்கு சக்தி இல்லை
அது என் விதி என்று சகித்துக் கொள்ளவும் முடியவில்லை.

ரெண்டுங்காட்டான் பிறப்பிற்கு
ஒரு சிறந்த உதாரணம் நான்தானோ.

எங்கள் இருவருக்கும் நட்பு பாலத்தை
உருவாக்கி கொடுத்து உதவுங்கள்.

எந்தன் அருமையை அவனுக்கு எடுத்து
நீங்களும் சற்றே கூறுங்கள்.

உங்கள் ஆதரவு அவனுக்கு இருப்பதால்
தலைக் கனம் தெரியாமல் ஆடுகிறான்.

நண்பன் சொன்னால் நண்பன் கேட்பான்
ஆதலால் நீங்கள் சொல்லுங்கள்.

கெஞ்சிப் பார்ப்பேன் கேட்டும் பார்ப்பேன்
முடியாதென்றால் மிரட்டியும் பார்ப்பேன்.

எப்படி என்று யோசிக்கிறீரா, கேலி சிரிப்பு சிரிக்கிறீரா.

உங்கள் கற்பனை கருவை எழுத்து வடிவில்
கொண்டு வருவதை நிறுத்தி விடுவேன்.

நீங்கள் முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும்
மடிந்து மடிந்து மீண்டும் எழுவேன்.

அதனால் உங்கள் கற்பனை திறனை
மீண்டும் மீண்டும் சிதற அடிப்பேன்.

ஆர அமர்ந்து யோசித்துப் பாரும்
என் உண்மை நிலையும் உமக்குப் புரியும்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (6-Nov-13, 10:34 pm)
பார்வை : 84

மேலே