நீதான்....

இன்னல்கள் பல
இருதயத்தின்
இடதுபுறம் குத்தும்

அவமானங்கள்
அறிவுத்திறனை
அசிங்கப்படுத்தும்.

சந்தர்ப்பங்கள் -உன்
சாதனைப்பக்கங்களில்
எச்சில் துப்பும்.

உனது நடைபாதையில்
முட்கள் மட்டுமே
முண்டியடித்து முளைத்திருக்கும்.

வானத்தை
வெறித்துப்பார்த்தே
வயது முதிர்ந்திருக்கும்.

கண்கள் கண்ணீர்
வடிக்காது - ஆனால்
நெஞ்சு மட்டும்
கொதிக்கும்.

வேலை கேட்டு
விண்ணப்பித்த இடமெல்லாம்
"நாய்கள் ஜாக்கிரதை"
அறிவிப்புப் பலகையே
அதிகம் தொங்கும்.

உறவுகளெல்லாம் கூடி
உதவாக்கரையென
அடிக்கடி உச்சரிக்கும்.

எதிர் வீடும்
அண்டை வீடும்
எள்ளி நகையாடும்.

தொப்புள் கொடி
உறவில் கூட
தொய்வு ஏற்படும்.

கண்களுக்கு
காலைச் சூரியன்
கனவில் மட்டுமே
உதிக்கும்.

முழுநிலவும்
உன்னைக் காணாது
முகம் மறைத்துப்போகும்.

அவ்வப்போது
சிந்தனை நரம்புகள்
சிதறிச் சேரும்.

இத்தனையும்
உனக்குள் சப்தமில்லாமல்
மொத்தமாக நிகழ்கிறதா?

துவண்டு போகாதே
தொடர்ந்து வா!

வரும்
நூற்றாண்டின்
சாதனையாளனே
நீதான்........


- கவிஞர் செல்வா
காரியாபட்டி.






எழுதியவர் : கவிஞர் செல்வா (26-Jan-11, 2:28 pm)
சேர்த்தது : kavingarselvaa
Tanglish : needhan
பார்வை : 471

மேலே