புலம்புகிறாள் ஒரு பூவை
புல்லின் நுனியில் பனித்துளி யாக
==பொங்கும் கண்ணீர்த் துளிகள் அரும்பி
கல்லும் கரையும் வண்ணம் உள்ளம்
==கசிந்த உருக்கம் கொண்டு வாழ்வில்
நல்லது என்று நம்பிய நட்பின்
==நயவஞ் சகத்தை நாளும் எண்ணி
பொல்லாப் பில்லா வகையில் தன்னுள்
==புலம்பு கிறாளே பூவை ஒருத்தி.
வெள்ளைத் தாமரைப் பூவிதழ் என்றே
==விளைந்த தூய தோழமை யாலே
கிள்ளை போன்று மொழிகள் பேசி
==கீதை யாக நட்பை போற்றி
உள்ளம் முழுதும் உவகை பூத்த
==உயர்ந்த அன்பின் வழிகளில் ஈற்றில்
முள்ளை போட்டு விட்டத னாலே
==முல்லைப் பூவும் புலம்பு கிறாளே!
பாத்திரம் அறிந்து யாசகம் செய்யும்
==பக்குவம் இல்லாக் காரணத் தாலோ
சாத்திரம் பார்த்து நட்பு வைக்கும்
==சம்பிர தாயம் அற்றத னாலோ
காத்திர மான அன்பின் தன்மை
==காயப் பட்டு விட்டத னாலே
ஆத்திரம் கொண்டு அடிக்கடி வந்து
==அழுது அழுது புலம்பு கிறாளே!