பருவம் இரண்டு -- மூன்றாம் மரணம்
அவசர ஊர்தி அலறிக்கொண்டு வர
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள்!
அவளின் உயிரின் ஓட்டத்தை சில
கருவிகள் கோடுவரைந்து காட்டிக் கொண்டிருந்தது!
நடப்பதற்குக் காரணம் 'நான்' என்பதை
நம்ப முடியாமல் அவன் தத்தளிக்க
இறுதியாய் கண்ணாடி கதவு வழியே
பார்த்தபின் அவளின் வாழ்க்கையைவிட்டு விலகினான்!
ஒரு மாதம் கழிந்தது!
அவள் உடல் நலம் தேறி
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாள்!
காயங்கள் மறைந்தது, சம்பவம் மறக்கவில்லை!
வருடம் மூன்று ஆனது!
அவன் கல்லூரியில் மூன்றாமாண்டு!
குணநலன் மாறாத முன்னேற்ற முனைப்பில்
நிலையான படிப்பும் தேவையான திறமையும்!
அதே கல்லூரியில் அவள் முதலாமாண்டு
அவன் அங்கே படிப்பது அவளறியாதது!
அவளின் அப்பாவின் 'வார்த்தைகள்' அழுத்தமாக
அவளைச் செலுத்த ஆரம்பமானது கல்லூரிக்காலம்!
அன்று காலை கல்லூரி வாசலில்
அவனைப் பார்த்தாள், வார்த்தைகள் இல்லை!
சிரித்து விட்டுப்போனாள் அவன் சிதறிப்போனான்
சிந்திக்க அந்தச் சிரிப்புக்கு அர்த்தமில்லை
மறுநாள் காலை கல்லூரி வாசல்
மீண்டும் அவனைப் பார்த்தாள் சிரித்தாள்
சிந்திக்க அந்தச் சிரிப்புக்கும் அர்த்தமில்லை
மனக் குழப்பத்தில் அவன் மூழ்கிப்போனான்!
ஒரு வாரம் ஓடிப்போனது இப்படியே!
பட்டமரம் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது!
மறந்துபோன காதல் மடை திறந்தது
இந்தப் பெண்களே இப்படித்தான்...!
இன்று அவளைப் பார்க்கும்போது
கேட்டுவிட வேண்டியதுதான் என்றே திட்டம்
அவளும் வந்தாள் நின்றாள் சிரித்தாள்
அவன் வாய்திறக்கும்முன் மொழிந்தாள் இப்படி
"நான் உங்களை காதலிக்கிறேன், நீங்க..."
என்றே சொல்லி புயலென மறைந்தாள்!
நடப்பதை எதுவும் நம்ப முடியாமல்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க
ஆயிரம் வயலினும் வீணைகளும் வாசிக்க
வெள்ளையாடை தேவதைகள் சுற்றி நடனம்!
இன்று அவள் கேள்விக்கு பதில்கூற
புத்தம்புது ஆடையும் பளிச்சிடும் வசீகரமும்
தோன்றினான் அவள்முன், அவன் சிரிக்க
அவளிடம் சிரிப்பில்லை வெறுப்பு இருந்தது
இம்முறை அவள் முறைத்து விலகினாள்
புரியாமல் தவித்து நின்ற அவனிடம்
பொங்கிச் சிரித்த நண்பர் கூட்டம்
"என்னடா ரோமியோ, "காதலா?"' என்றனர்
அவர்களின் நிறுத்தாத சிரிப்பில்தான்
அவனுக்கு புரிய ஆரம்பித்தது!
அவர்களின் "ராக்கிங்கில்" சிக்கி
அவனிடம் ஒருவாரம் தொடர்ந்து சிரித்து
காதல் சொல்வதுபோல் நடித்தாள் என்பது!
வயலினும் வீணைகளும் சோகராகம் இசைக்க
வெள்ளையாடை தேவதைகள் குத்தாட்டம் ஆட
அவனின் மூன்றாம் மரணம் தொடங்கியது!