நிலைத்திடும் நீங்காமல்

ஒரு துளியில் உயிர்பெற்று,
ஒரு கதிரவனாய் ஒளிக்கொடுத்து,
ஒருமித்த கருத்துடன் ஒன்றித்து வாழ்ந்தவனே,
ஒருபிடி சாம்பலில் உலகின் பந்தத்தை துறந்தவனே....!
சென்றுவிட்டாயே எமதினிய நட்பே...
வென்றுவிட்டதடா விதி உன்னை...
கன்றைப் பிரிந்த பசுவின் ஓலம்போல்,
இன்றுவரை ஆறலையே என் மனது.....
நீளும் வேர்கள் மண்ணின் ஆழத்தை துளைப்பதுபோல்,
நீளும் வேதனைகள் என் மனதை துளைக்கின்றனவே...
மீளாத்துயிலில் நீ ஆழ்ந்தவிட்டதால், நண்பனே
மீளாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டாயே....
வாழவேண்டிய வயதில் வலுக்கட்டாயமாக பறித்து,
வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சந்தோஷத்தைப் பறித்து,
வாழனும் என்ற துடிப்பில் கண்ணீருடன் மன்றாடிய உயிருக்கு,
வாக்கரிசி போடவைத்ததில் இறைவா உமக்கு பங்குண்டு,
அதனால் உம்மேல் எமக்கு அளவில்லாத கோபமுண்டு...
மடிந்த ராகம் இனிமேல் மனதில் மட்டும் இசைக்கும்,
விடிந்த பொழுதெல்லாம் உன் நினைவுகள் தொடரும்,
இடிந்து நின்றாலும் விலக்கிட இயலாத உன் நட்பு, நான்
மடியும் வரை எனக்குள் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும்.
பிரிந்தது உன் உயிர் மட்டுமே எமதினியநட்பே,
பிரியாது எக்கணமும் உன் நினைவுகள்...
விரிந்த வானாய் உன்னை நினைத்து,
சரியும் மனதை சாந்தப்படுத்திக் கொள்கின்றேன்....
(சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நண்பர் ஒருவருக்கு எமது கண்ணீர் அஞ்சலி)
பெ.மகேஸ்வரி.