நம் நட்பு

பிரசவத்தின் வேதனையை மறந்து
குழந்தையின் அழுகுரல் கேட்டதும்
தாயின் முகத்தில் தோன்றும்
புன்னகையுடன் பிறந்தது
நம் நட்பு !
பார்க்காமல் வருவது காதல்
கை கோர்த்து நடப்பதுதான் நட்பு
என்ற மூடர்களின்
பேச்சுக்களைத் தாண்டி
வானத்தில் கை கோர்த்து
மிதந்து கொண்டிருந்தன
நாம் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் !
ஆண் -பெண் பேதங்கள் பார்க்கும்
மனிதர்களின் கூட்டத்தில்
அதன் எல்லைகளைக் கடந்து
பயணித்துக் கொண்டிருப்பவர்க
ளுடன்
நாமும் இணைந்து கொண்டோம் !
வார்த்தைகளைக் கவனமாகப் பேசி
உறவுகளை நீட்டிக்கும்
கட்டாயத்தின் நடுவே
உனக்கான வார்த்தைகளை
எந்தக் கட்டுப்பாடும் இன்றி
சுதந்திரமாய் பேச வைத்தாய்!
நேற்று பிறந்த
குயில் குஞ்சின்
மழலைக் கூவலைக் காட்டிலும்
இனிமையானவை
நம் வார்த்தைகள்
வாக்குவாதங்கள்!
தேவையற்ற விவாதங்களுக்கு
இடையிலான இடைவெளியை
உன் சிரிக்க வைக்கும் சொற்களால்
நிரப்பி விடுவாய்!
நட்பு கொள்வது
ஒருவரை முழுமையாய் சந்திப்பது
என்பதை உணர்ந்த பொழுது
நாம் பிரிக்க முடியாதவர்களாகி
விட்டோம்!
புதிதாய்
மொட்டு விரித்திருக்கும்
முல்லைப் பூவின்
இதழ்களைக் காட்டிலும்
தூய்மையானவர்களாகிவிட்டோம்!
நான் அறியாமல்
நீ என்னை கை விடும்
சிறு பொழுதில்
நம் பிரியத்தின் கனல்
எரியத் தொடங்குகிறது !
இருந்தும் நான் என்னை
ஆற்றிக் கொள்வேன் ..
என் இறுதி முச்சின்
வெப்பத்தையும்
அருகிலிருந்து உணர்பவன்
நீதான் என்று !
காலத்தின் கட்டாயத்தில்
நமது உயிர் பிரியும் தருவாயில்
நம் நட்பினைப் பிரித்து விட்டதாய்
எமன் குதூகலிக்கலாம்...
ஆனால்,
சருகாகி
மண்ணினுள் மக்கிப் போகும் வரை
பிரியாதிருக்கும்
இலையும்-நரம்பும்..
நமது கல்லறையில்
பூத்திருக்கும்
மஞ்சள் நிற பூக்களும்
என்றென்றும்
நம் நட்பின் வாசனையை
பரப்பிக் கொண்டிருக்கும் !!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (20-Feb-14, 11:17 am)
Tanglish : nam natpu
பார்வை : 566

மேலே