அறியாமலேயே

வாடகை கூட்டில் வாழ்ந்த மனிதா
வரம்புகள் மீறியே வாழ்ந்தது ஏனோ
எல்லாம் தனக்கென்று சேர்த்தாய் நீயோ
இறுதியில் தீயாய் எறிந்தாய் நீயே .........

சுயநலம் கொண்டு சொத்து சேர்த்தாய்
பொதுநலம் கொன்று பணத்தை பார்த்தாய்
எவர்நலம் உனக்கு பெரிதாய் இல்லை
பலர்நலம் அழித்தல் உந்தன் கொள்கை .........

கண்ணுக்குஎட்டா காணிகள் கிடக்கு
கையில் நிறைய பணமும் இருக்கு
வீடு வாசல் பெரிதாய் கிடக்கு
விளைச்சல் அந்த கிடங்கில் இருக்கு ...........

எலியும் குருவியும் தின்றதை கூட
ஏழைக்கு நீயோ கொடுத்தது இல்லை
எல்லாம் உனக்காய் சேர்த்து வைத்தாய்
இறுதியில் எதைத்தான் கூட்டு சேர்த்தாய் .......

காடும் கழனியும் எல்லாம் இருந்தும்
கையில் கிடைத்தது கைப்பிடி சாம்பல்
எல்லாம் உனக்காய் சேர்த்தாய் நீயோ
இறுதியில் விட்டு போனாய் நீயே .......

பலவித மனிதனின் வாழ்க்கை பாடம்
படித்தும் திருந்த ஏனோ காலம்
பிறர்க்கும் கொடுத்து வாழ்ந்து பாரேன்
பிறவி பயனை அடைந்து போயேன் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (24-Feb-14, 12:26 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : ariyamaleye
பார்வை : 100

மேலே