கருவறை உலகம் - இருள்

நீலம் தாண்ட
விடுவதில்லை வெளிச்சம்..
வானின் ஆழம்
காண வைக்கின்றது இருள்..!!

ஓட ஓட
துரத்துகின்றது பகல்..
ஓரிடத்தில்
உட்கார வைத்து
இளைப்பாற்றி
ஆற அமர பேசவைத்து
உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும்
புத்துயிர் ஊட்டி
இதம் தருகின்றது இரவு..!!

இடம் பொருள்
உயிர்களுக்கெல்லாம்
வெவ்வேறு வண்ணம் ஊற்றி
வேற்றுமை குணம்
கொடுக்கின்றது ஒளி..
முப்பரிமான பிம்பம் கரைத்து
எல்லாவற்றிற்கும்
மூலம் ஒன்றுதான்
என்று
சொல்லாமல் சொல்லி
ஒற்றுமை பேசுகின்றது காரிருள்..!!

போலி முகங்கள்
உலாவுகின்ற உலகம்
அகம் மறைக்கும் பகல்..
முகமூடிகளை பெரும்பாலும்
அவிழ்துக்காட்டிவிடும் இருள்..!!

திருடனை திருடனாக
உலாவ விட்டு
காட்டிக் கொடுப்பது இருள்..!!

மறு சுழற்சியின்
இடைவேளை இருள்..!!

கற்பனைகளும்
கனவுகளும்
பிறந்து
கண்விழித்து
சிறகுகள் முளைத்து
சுதந்திரமாய் திரியும்
கருவறை உலகம் இருள்..!!

இந்த
வேற்றுமை இல்லா
உலகினில்தான்
மொட்டவிழ்க்க
பிடிதிருக்கின்றதாம் பூக்களுக்கும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (5-Apr-14, 6:27 am)
பார்வை : 292

மேலே