சிறப்புக் கவிதை 21 தனராஜ் பருவப் பயணம்

கால்கொஞ்சம் முளைத்தது
== காலனை மிஞ்சிவிட்டோம் !
வாலில்லா வானரமாய்
== ஊர் சுற்றி ஓடிவந்தோம் !

மூவைந்து வயதுவரை
== மூக்கணாங் கயறில்லை!
ஈரைந்து தலைகொண்ட
== இராவணனும் இணையில்லை !

கொட்டும் மழையினிலே
== நனைந்து நடுங்கிடுவோம் !
வெட்டும் மின்னலிலும்
== வீரவசனம் பேசிடுவோம் !

குளத்தில் நீர்வந்தால்
== குதித்து விளையாடிடுவோம் !
வளவிட்டு வெளிவந்தா
== நண்டைப் பிடித்திடுவோம் !

அணியணியாய் சீருடையில்
== அரசுப்பள்ளி சென்றிடுவோம் !
அணிய செருப்பில்லாமல்
== பாதம்வெந்து பழகிடுவோம் !

வாலில் ஓலைகட்டி
== கழுதையை விரட்டிடுவோம் !
காலில் செருப்பின்றி
== கண்டபடி சுற்றிடுவோம் !

பாம்பென்று சொன்னாலே
== படபடத்து நடுங்கிடுவோம் !
கொம்பொன்று கண்டாலே
== தூரியதில் ஆடிடுவோம் !

கரட்டானைக் கண்டாலே
== கல்லெடுத்து எறிந்திடுவோம் !
கோட்டானைக் கண்டாலோ
== கோவணத்தை மறந்திடுவோம் !

அப்பனைப் பார்த்து
== "அட போ " வென்போம் !
"குப்"பென வியர்த்து
== ஆசான்முன் அடங்கிடுவோம் !

பயமற்ற இளங்கன்றாய்
== பாதிவழி கடந்திட்டோம் !
வயமான கால்கட்டில்
== மீதிவழி மறந்திட்டோம் !

வம்புதும்பு மறந்துபோச்சு
== கம்புசுமந்த கழுதையாச்சு !
தும்பு பூட்டி எருதுமாச்சு
== துயரடைந்த முதுமையாச்சு !

வாழ்க்கை

எழுதியவர் : தனராஜ் (21-Apr-14, 10:54 pm)
பார்வை : 136

மேலே