காதல் - கல்யாணம்

காதல் - கல்யாணம்

அந்தி மாலையில்
மலர் உறங்கும் நேரத்தில்
கால தேவனின்
கருணையின் காரணத்தால்
அறிமுகம் இல்லாமல்
பார்த்துக் கொண்டோம்.....

கண்கள் தான் பேசுமோ?
நாங்களும் பேசுவோம் என
போட்டி போட்டு
உதடுகளும் வார்த்தைகள் வீசின...

தெரிந்தும் தொலைத்தோம்
இதயத்தை......
பிரிந்து பிறந்த நாங்கள்
ஒன்றாய் இணைந்தோம்
கவின்மிகு காதலால்....
உறவுகள் தாண்டி
உயிர் ஆனோம்......

காமன் வாழும்
பல காதல் தாண்டி
புனிதமாய் வளர்ந்தது
எங்கள் காதல்....

அன்பெனும் அருமருந்தால்
ஆயுதமின்றி கொல்லப்பட்டோம்
இமையசைவில் பரிமாறிய காதலால்
ஈருடல் ஓருயிர் ஆனது
உயிர் விட்டுப் போனாலும்
ஊர் விட்டுப் போனாலும்
எவராலும் பிரிக்க முடியாத
ஏட்டிலும் எழுதப்படாத
ஐயம் என்ற பொருள் அறியா
ஒரு நாளும் அளிக்கப் படாத
ஓவியமாய் வளர்ந்தது

அழுதோம்!....
சோகத்தில் இல்லை
இன்பத்தில்
கண்ணீரும் முகம்
பார்க்கும் பனித்துளியானது...

உணர்வுகளும் இறந்து
போகுமென்று
புரிந்து கொண்டோம்
நாங்கள் பிரிந்திருந்த தருணங்களில்....

அடி வைத்தோம்
அடுத்த வாழ்க்கை படிக்கு,
கல்லெறிவார்களோ என
பயந்து நடுங்கிய
பெற்றோர்கள்
பூத்தூவினர் மணவறையில்!.....

இமையசைவில் அரும்பி
இதழசைவில் தொடர்ந்து
சிரிப்போசையில் பயணித்த
எங்கள் காதலை
இணைத்தனர் கரங்களால்!.....

இப்பிறவிபோல் எப்பிறவியிலும்
சேரும் வரம் வேண்டி
சிந்தனை வெள்ளத்தில்
பூக்கிறது சிற்றின்ப ஆசை.........

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (26-Jun-14, 5:08 pm)
பார்வை : 150

மேலே