பச்சை பூ

என்னையே உலகென கொண்ட
என் உலகம் ஒரு மஞ்சள் ரோஜாவை
என் கையில் சேர்த்தது.

கை, கால் முளைத்த
இளஞ்சிவப்பு ரோஜாவுடன்
புகைப்படம் எடுத்துகொண்ட போது
மஞ்சள் ரோஜாவை அதனிடம் கொடுத்தேன்.

கோபித்து கொண்ட என் உலகம்
பூ போன்றதொரு
வேப்பிலை தொகுப்பொன்றை
என் கையில் தந்தது.

ஞானி ஒருவருடன் நடந்த
அபிநய உரையாடலில்
அதுவும் என் கை விட்டு போனது.

மீண்டும் கோபித்துகொண்ட என் உலகம்
மூன்றாவதாக . . .
பெயர் அறியா பூ போன்ற இலை ஒன்றை கொடுத்தது.

அக்கணம் முதல் என் உயிரின் கொஞ்சத்தை
அந்த இலையில் உணர்ந்தேன்.

புத்திக்கு தான் அது இலை.
இதயத்திற்கு அது பூ...

எழுதியவர் : ஜெகதீஷ் (17-Jul-14, 12:00 pm)
Tanglish : pachchai poo
பார்வை : 72

மேலே