நீ இல்லாமல் என் இல்லம்
"உன்னோடு வாழ்வது நரக வாழ்க்கை" என
உண்மை சொல்லிப் போனாய்...
நரகத்தில் பூக்கள் இல்லை....
நம் வீட்டில் இருக்கின்றன ...
பூவாளியை நான் தொடும் போதெல்லாம்
"எங்கே அவள் " என கேட்கும்
பூக்கள் நம் வீட்டில் இருக்கின்றன ...
நீ வகுப்பெடுக்கும் ஆட்டிச சிறுவன்
வந்து வந்து போகிறான்
உன்னை தேடிய படி ....
நீ இல்லாமல் அலைபேசி
அடங்கிக் கிடக்கிறது அமைதியாய்
ஒவ்வொரு அழைப்பிலும் உன்னை
எதிர்பார்த்த படி ...
நீ இல்லாமல் இரவுகள்
முழுவதும் கனவுகள்..
உனக்கு ஏதோ நேர்ந்தது போல் .....
என் வீடு உனக்கு மட்டுமல்ல
நரகம் தான் எனக்கும்....
அதை சொர்க்கமாக்கும்
ரசவாதம் கற்ற
தேவதை நீ இன்றி.....