முரண்பட்டு முரண்பாட்டோடு -------அஹமது அலி---------
பகுத்தறிவுச் சுடரென்று
பலகை கழுத்தில்
நெற்றியில் திருநீரில்லை
முகத்தில் தாடியில்லை
நெஞ்சில் சிலுவையில்லை
எம்மதமும் சம்மதமென்பாய்
நாத்திக மதம் பற்றிக் கொண்டு
நேராக சிந்திப்பதாய்
சுய விளம்பரம்
சிந்தனையாளர் பட்டம்
சில ஊதுகுழல்களின் தம்பட்டம்
சமூகத்தை காக்க வந்த
அவதாரம் போல் துடிப்பாய்
சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப
அரிதாரம் பூசி நடிப்பாய்
காதலை பாடினாலும்
காதலியை பாடினாலும்
பொறுக்காது பொறுமுவாய்
காதலின்பம் துய்த்து
விவாகப் பள்ளியில்
விவேகப் பட்டம் பெற்று
சதைக்கு ஆசைப்பட்டு
கொள்கைக்கு சிதை வைத்தாய்
சோறு கண்ட இடம்
சொர்க்கம் ஆச்சு
பேரு பெற்ற இடம்
நரகம் ஆச்சு
செஞ்சோற்று கடன் தீர்க்க
நீ கர்ணனுமில்லை
உன் கவசத்தை கவர்வதற்கு
நான் கண்ணனுமில்லை
முரணோடு உருண்டோடி
முதல் பரிசும் பெறுகிறாய்
முரண்பாட்டு மேடையில்
சமன்பட்டு இளிக்கிறாய்
வணங்கக் கூடாதென்று
வசைப் பாட்டு பாடுகிறாய்
வார்த்தையை தொடங்கும் முன்
வணக்கம் வைத்து தொலைக்கிறாய்
நேராக சிந்திக்க
கூராக சொல்வாய்
தாறுமாறாக தடம் புரண்டு
படு குழியில் வீழ்ந்ததை அறியாமலே
பெரியவனே பெரியவனே
உனக்கும் எனக்கும் பெரியவன் உண்டு
அவன் தீர்ப்பு நாளை அஞ்சிக் கொள்
இது தீர்க்கமானது அறிந்து கொள்!
(முன்னொரு நாளில் என் நண்பனுக்கு எழுதியது )