கொடை முடியும் மறுநாள்

விழியோரத்தில் தொக்கி நிற்கும் கனவின் வண்ணம்
நெட்டி முறிக்கும் கை தேடும் சாம்பல் கிண்ணி
பனிப்பூ சூடிய கரும்பச்சைக் காட்டு வழி
நோகாத தளர்நடை எழுப்பும் சாவகாச சருகொலி
சடையிடுக்கு ஒவ்வொன்றின் துளை மூடும் செவ்வந்தி
தும்பைக்கும் முறியாத நஞ்சுமிழும் கருநாகம் பித்தாகி
தலை கீழாய் நெளிந்து எழும் தாழம்பூ வனம்
வளைந்தாடும் நிலவொளியில் பாலாகும் மலையருவி
உடையெனும் சிறை இன்றி காற்றணைக்கும் சில்லுடல்
இவை எண்ணி,
கருவறைக்குள் வியர்த்தொழுகும் பொட்டும்,
நெஞ்சழுத்தும் பட்டுமாய்
கொடை முடிய காத்திருக்கிறாள்
என் குலத்து சிறுகாட்டுப் பெண் தெய்வம்!

எழுதியவர் : அஜிதா (18-Sep-14, 7:12 am)
சேர்த்தது : AjithaB
பார்வை : 221

மேலே