போராளி - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தளர்கள் சங்கத்தில் பரிசும் பாராட்டும் பெற்ற கவிதை

போராளியின் படம் கேட்டாய்
கொடுத்தேன்.
இவன் எப்படி போராளியாக முடியும் ?
என்றாய்.
இவன் எப்படி போராளியாக முடியாது
என்றேன்?
சீருடை எங்கே?
கோபப்பார்வை எங்கே?
பரந்த தோள்கள் எங்கே?
துப்பாக்கி எங்கே?
என்றாய்.
இவையெல்லாம் எதற்கு என்றேன்?
போராட என்றாய்.

கடைசி குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் இருந்தபோது
இவனும் சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! அதுதான் சீருடை.

எதிரியையும் நேசித்தானே
அதுதான் போர் யுக்தி!
அகிம்சையையும், அன்பையும் தாங்கிச் சென்றானே
அதுதான்
அவன் துப்பாக்கியும் தோட்டாக்களும்! என்றேன்.

இப்போது நீ சொல்,
உன் போராளியின் நோக்கம் என்னவென்றேன்?
"போராடுவது" என்றாய்.

உண்மைப் போராளியின் நோக்கம்
போராட்டமல்ல
"அமைதி" என்றேன்,
அமைதியனாய்.

உங்கள் போராளிகளெல்லாம்
போரை விதைத்துச் சென்றபோது
அவர்கள் வாரிசுகள் இன்னும்
கண்ணீரையும் குருதியையும் தூவி
மனிதஉயிரை அறுவடை செய்கிறார்கள்.

எங்கள் போராளி விதைத்த
அன்பில்
நாங்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்
அமைதியை!

வாழ்க பாரதம்!
வளர்க மகாத்மா புகழ்!

எழுதியவர் : ராஜேஷ் (25-Oct-14, 9:44 am)
Tanglish : poaraLi
பார்வை : 327

மேலே