முதலுதவி

முதலுதவி
பாவலர் கருமலைத்தமிழாழன்
கனிமரங்கள் நிழல்கொடுக்கும் சாலை தன்னில்
காலைநேரம் தந்தையொடு மகனும் சேர்ந்தே
இனிமையான இயற்கையினைச் சுவைத்த வாறு
இன்பமுடன் உரையாடிச் செல்லும் போது
தனியாக மாட்டுவண்டி சேற்றுப் பள்ளம்
தனில்சிக்கி நின்றிருக்க வண்டி யோட்டி
குனிந்ததனை நகர்த்துதற்கும் முயன்றி டாமல்
குரல்கொடுத்தே உதவிகேட்டு நின்றி ருந்தான் !
வண்டியோட்டி உதவிகேட்டும் உதவி டாமல்
வரும்தந்தை பின்னாலே மகனும் சென்றான்
கண்முன்னே அடுத்ததொரு வண்டி நிற்கக்
கால்சேற்றில் பதிந்துநின்று வண்டி யோட்டி
மண்சேற்றில் புதைந்திருக்கும் சக்க ரத்தை
மனஉறுதி யோடுதூக்கும் காட்சி கண்டு
தன்கரத்தால் அழைக்குமுன்னே உதவி செய்த
தந்தையினைக் கண்டுமகன் வியந்து கேட்டான் !
உதவியெனக் கேட்டவனை ஒதுக்கி விட்டே
உதவிகேளா அவனுக்கேன் செய்தீ ரென்றான்
உதவியெனக் கேட்டவன்தன் முயற்சி யின்றி
உழைக்காமல் நின்றிருந்தான்; அடுத்தி ருந்தோன்
உதவிக்காய் நில்லாமல் சக்க ரத்தை
உடல்வளைத்துத் தூக்குதற்கே முயற்சி செய்தான்
முதலவனோ சோம்பேறி; உழைப்போர்க் கேநாம்
முதலுதவி செய்யவேண்டும் என்றார் தந்தை !