அருந்ததி
பண்டிகை காலம் முடிந்து பணிதிரும்பும் தருணம் ,
பேருந்துகள் நிலையம் வரும்முன்பே நிறைந்தே
தடம் வந்தன ,நல்லவேளையாக நண்பனொருவன்
சொன்னது போல் இடமொன்று பிடித்து தந்தான் .
கொஞ்சம் நகருங்க என்று கெஞ்சியவாறே உள்
நுழைந்தேன் ,என் இருக்கை அருகே பதின்ம
வயதோடு அழகிய பெண்ணொருத்தி நின்றிருந்தாள்
இடம் பிடித்து தர ஆள் இல்லை போலும் ,
அவள் ஆடையையும் விழியையும் கடந்து என்
இருக்கை சென்றமர்ந்தேன் .கறையறு முகத்தை
பார்க்காமல் இருக்க முடியவில்லை,நெரிசலின்
தவிப்பில் அவ்வப்போது சிணுங்கி கொண்டாள் ,
சிணுங்கல் மொழியை அவள் அழகோடு சேர்த்து
ரசித்து கொண்டிருந்தேன் .மெல்ல முன்னிருந்த
இருக்கையில் இடையை தளர்த்தி தள்ளாடும்
மெய்யழகை என் முன்னே நிறுத்தி நின்றாள் ,
அமிர்தம் வழியும் நாகக் கடல் என் முன்னே
படர்ந்து விரிந்திருக்க பருக இயலாமல்
தவித்து மூழ்கவிடப்பட்டேன்,சற்றே என்னுள்
உறைந்திருந்த மோகத்தீ பற்றி எரிய தொடங்கியது,
நடத்துனர் உள்ளே நுழைய அவள் பின்நகர்ந்து
இன்னும் நெருக்கமாய் வந்து முகத்தில் இடையை
நிறுத்தினாள் ,அணைத்து முத்தமிட தோன்றியது,
நடத்துனர் எங்களை கடந்து சென்றார் ,
பெண்ணானதால் வெகு நேரம் நிற்க நெருக்கடியாக
எப்படியோ முயற்சித்து கீழே அமர்ந்தாள் , வேறு
இடமில்லாமல் என் காலின் மேல் தஞ்சம் கொண்டாள்
குளிர்ந்த நீரில் கால் நனைக்கும் அனுபவம் எனக்கு ,
இடநெரிசலால் உறக்கம் தொலைக்க சலித்தவாறே
இருக்கை ஓரம் தலைசாய்த்தாள் , ஒரு முறை
ஏறிட்டு என் முகம் பார்த்தாள் , நான் காணாதது
போல இமை மூடினேன் ,
அருகாமை இருந்தோர் இடப் பற்றாக்குறையை
அதிகரிக்க மேலும் நெருங்கி அவள் தலையை
என் மடியின் மீது வைத்து கொண்டாள் ,பாதி
உடலை என் காலோடு அணைத்து கொண்டிருந்தாள் ,
ஆனந்த களிப்பில் அப்படியே என்னை நானே
தொலைக்க முயற்சித்தேன் , அதற்க்குள்ளாகவே
நான் இறங்க வேண்டிய இடம் வந்தடைந்தது ,
நடத்துனர் எல்லோரையும் எழுப்ப முயன்றார் ,
அவள் எழுந்திருக்க வாய்ப்பின்றி கையை நீட்டினாள்
வாய்ப்பென கருதி பிடித்து தூக்கினேன் ,மங்கை
முகத்தில் மாற்றமேதுமில்லை .,
என் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவளைக்
கடந்தேன் ,ஒரு நிமிடம் என என்னை அழைத்தாள் ,
உள்ளம் பதறியது,மெதுவாய் திரும்பி பார்த்தேன்,
அவள் என்னிடம் ‘நன்றி ‘என்றாள் , என் காமம்
காற்றில் கரைந்து கொண்டிருந்தது ...