என் காதல்- போட்டிக் கவிதை

உன் பதினெட்டு பக்க மன்னிப்பு கடிதமொன்றில்
இருக்கின்ற ஒவ்வொரு எழுத்துக்களிலிருந்தும்
ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது..

இன்னொரு முறை திருத்தி எழுதப்பட்ட ஒரு தீர்ப்பில்
மறைந்திருக்கின்ற தண்டனையாகவே
இதை கருதுகிறேன்
அந்த வலியை அப்படித்தான் சொல்ல முடியும்..

ஒளிக்கற்றையாய் வந்து விழும் சொற்களிலிருந்து
குறிப்பிட்ட சில தருணங்களை மட்டும்
மீட்டுருவாக்கம் செய்வதற்கான பணிகள்
அனிச்சையாக தொடங்கிவிட்டிருந்தன..

ஒரு ஓவியம் தனக்கான தூரிகையை
தானே தேர்ந்தெடுப்பதைப் போல
அந்த விதி அமைக்கப்பட்டிருந்தது..

வெந்து எழும்பும் ஒரு எதிர்காலத்தை
நான் இப்போதே வாழ்ந்துவிடக் கடவுதாக
ஒரு குரல் அசரீரியாகக் கேட்கிறது...

விடுமுறை நாளுக்குப் பின்னான
ஒரு வேலை நாளின் கனத்தைப் போல
இதை ஏற்றுக் கொள்வதற்கு
நான் என் மனதை
ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்..

நடப்பது நடக்கட்டும் என்கிற
உன் வலிய கோட்பாட்டை
உன்னளவு இல்லாவிட்டாலும்
ஒரு மைக்ரான் அளவுக்காவது
பின்பற்ற முயற்சி செய்கிறேன்..

மற்றபடி
வழக்கமான உன் நன்றிகளை
இந்த முறையும்
உதாசீனப்படுத்திவிடப் போகிறேன்... !!!


** ஆனந்த் தமிழ்**
எம். இ இன்ஜினியரிங் டிசைன்..
mob no : 9600725969

எழுதியவர் : (9-Nov-14, 10:53 am)
பார்வை : 93

மேலே