முதலும் முடிவும்

அன்னை வயிற்றினுள் அடைபட்டிருந்து
முன்னை வினையுடனே புவிநுழைந்து
என்னை வெலலரிது என்றே இறுமாந்து
பின்னை யொருநாளில் உயிரின்றி போவேனோ!

கண்ணை மறைத்தே காதலும் காமமுமாய்
மண்ணை அடைந்திடவே மாநிலத்தில் ஈட்டியதை
வெண்ணை திரண்டுவரும் காலமதில் கொளலின்றி
விண்ணை யடைந்திடவே தாழிதான் உடைந்திடுமோ!

வேடம் பல புனைந்து வேள்விகள்தான் புரிந்து
காடும் ஏகிடும் நாள்வரவே காயம் அழிந்துபட
ஓடும் நீரெனவே வாழ்வு ஓரிடத்தில் நில்லாது
வீடும் துறந்தெனது வேடிக்கை முடிந்திடுமோ !

ஊரும் உறவுமென்ன உற்றார் பெற்றாருமென்ன
பேரும் புகழுமென்ன பெருவாழ்வும் போனதென்ன
யாரும் நினைக்கிலதோர் நாளும் வந்ததென்ன
சேரும் இடமொன்று சீவனுக்கு பரம்பொருளே!

எழுதியவர் : கருணா (8-Dec-14, 4:43 pm)
பார்வை : 183

மேலே