பொங்கல் திருநாள் கவிதை
பொங்கல் திருநாள் கவிதை
“பொங்கும் பேரின்பம் தங்கும் புவியெங்கும்
எங்கும் மணம் கமழ இன்பப் பொலிவோடு
இன்னிசை வண்டுகள் சங்கீத இசையெழுப்ப
பூந்தென்றல் தவழ்ந்தினிதே தேன்மலர் மணம் பரப்பி
கார்குழல் கூந்தலிலே மிடுக்குற்று திகழ
காரிகையோ தன் காந்தள் விரல்களினால்
நெய்மணக்கும் நொய்யரிசியுடன் சுவைமிகும்
கருப்பஞ்சாற்றினைக் கலந்தினிதே
வீதியெங்கும் கமகமக்கப் புதுப்பானையது தனிலே
பொன்மஞ்சள் தன்னோடு, பொன்னொளி சிந்தும்
செந்தூரத் திலகமிட்டு
வாயிலில் காத்திருந்தாள் வண்ணமுறக் கோலமிட்டே,”
“தங்கத் தட்டெனவே தகதகவென ஒளிவீசி
சிங்க ஏறெனத் திகழும் வெண்புரவி ஏழுடனே
புன்னகைத் தவழ்ந்திடவே பொலிவுடன் அதிகாலைத் தனிலே
வெள்ளி வீதியிலே வீறுடன் வந்துநின்றான் வெய்யோனும்”
வையகமும் வானகமும் இந்நாளை எதிர்நோக்கி
பூத்த நல் மலரினைப்போல் புன்னகைத் தவழும் இன்முகத்துடன்
ஆரவாரம் தானெழுப்பி “பொங்கலோ பொங்கலென்றே”
சங்கீத இசை இசைத்தனர்.
“பொங்கும் மங்களம் எங்கும் தங்குக” என்றினிதே வாழ்த்தி!
அன்புப் பொங்கலை ஆர்வமுடன் ஏந்தி உண்டு,
கண்ணிமைக்கும் நேரமதில் விண்ணிலே கண்சிமிட்டி மறைந்தான்
கோமகனாம் பாஸ்கரனும்”
“வாழிய வையகம்! வாழிய வாழியென்றே
வாழ்தி ஒளி வீசி நின்றான்.”
அன்புடன்,
ஸ்ரீ . விஜயலக்ஷ்மி

