நான் இப்படியே இருக்க வேண்டும்

இ போடாச் சொன்னால்
முறுக்கு பிழிந்ததிலிருந்து
எனக்குள் இருக்கும் குழந்தை
வாலிப வாசலையும் தாண்டுவதாலே
இன்னும் உயிரோடிருக்கிறேன்.

நண்பர்களிடம் மறைந்து விளையாடி
மனைவியிடம் முட்டாள் பேர்வாங்கி
சித்த சுவாதினத்துடன் கூடிய
பைத்தியக்காரத்தனம் இருப்பதாலே
செல்லரிக்கா சிரிப்போடிருக்கிறேன்.

சரியாக நான் வீடு நுழைகயில்
கார்டூனை முழுவதும் மறந்து
ஐ அப்பாவென கத்தும் மகளுக்கு
உறங்கும் வரை பொம்மையாவதால்
இதயம் துடிப்போடிருக்கிறது.

வேலை முடிந்து சீருடை துறக்கயில்
பதவியையும் மறந்துவிடுகிறேன்
மறுநாள் காலை வரையிலாவது.
சில கிறுக்குத்தனங்களும் கூட
என்னை மனிதனாக வைத்திருக்கிறது...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-Mar-15, 5:36 pm)
பார்வை : 95

மேலே