கறுப்பு
கருவறையும்
கண்மணியும்
இரவுகளும்
சாபங்களும்
கருப்பாய்த்தான்
இருக்கும்
எனில்,
மனசைக் கருக்க விடலாமா ..
அது ஒரு
வெள்ளை பூவல்லோ?
0
இரவின் கருப்பில்
நிலத்தின் வண்ணங்கள்
நிறமிழந்து போகின்றன
மனதின் கருப்பில்
உழுதிடும் எண்ணங்கள்
உரமிழந்து சாகின்றன
0
ஒரே ஒரு
கரும்புள்ளியால்
வெள்ளை ஆடை
வீணாகிவிடலாம்
வாழ்க்கையைப் போல ..
0
கல்லும்
கடவுளும்,
கறுப்பாக இருக்கலாம்
காலங்களும்
கவிதைகளும்
கறுத்துவிடக்கூடாது !
0
கறுப்பு மேகங்கள்
சூல் கொண்டால்
மழை நீர்
பெருக்கெடுக்கும்
இங்கு,
கறுப்புப் பணங்களே
சூல் கொண்டதால்
பொருளாதாரப் பச்சை
வெளுத்துவிட்டது ...! (1991)
("ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் " நூலிலிருந்து