மழை பெய்த நேற்றையப் பொழுதில்-2

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
என் கெஞ்சல் போலும்...

அடிக்கடி சண்டையிட்டு
அவ்வப்போது முறைத்து
அர்த்தமின்றி கோபப்படுவாய்.

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
தேடலும் போலும்...

மரத்திற்கு பின் பதுங்கி
சிறிது நேரம் கழித்து-என்
முன்னே வந்து மன்னிப்பு கேட்பாய்.

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
மௌனமும் போலும்..

கைப்பேசியில் அழைத்து
பேசாத லொடலொடா என்று
செவிநுழை இசைக்கருவியால்
என் சுவாசம் கிரகிப்பாய்.

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
கேலியும் போலும்..

உன்னைவிட்டால் ஆயிரம்பெண்கள்
என்று நான் சொல்கயில்- நீ,
என்னைவிட்டால் ஒரு பைத்தியமும்
உனக்கு கிடைக்காது என்பாய்.

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
கடுப்பும் போலும்..

வேண்டுமென்றே என்முன்
அவனிடம் சிரித்துப் பேசி
நான் வந்தததை அறியாது போல்
திரும்பிக்கொள்வாய்.

என்னிடம் உனக்கு
அதிகம் பிடித்தது
எல்லாமும் தான் போலும்..

மொத்தமாய் உனக்கு
பிடித்த என்னை எப்படி
துகள் துகளாய்ப் பிரித்து
இரசிக்க முடிகிறது உன்னால்?

ஒரு
சுட்டுவிரல்
தீண்டலுமின்றி...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (7-Apr-15, 8:50 pm)
பார்வை : 83

மேலே